கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டளையிட்டுள்ளார்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், நேற்று (27) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “கேப்பாப்புலவு காணிப்பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதியைச் சந்தித்துக் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அங்கு 54 காணிகளுக்கு உரிமங்கள் காணப்படுகின்றன. அதில் 42ஐ பரிசீலித்த அரசாங்க அதிபர், அவை மக்களுக்குச் சொந்தமானவை என, ஜனாதிபதி மற்றும் விமானப்படைத் தளபதிக்கு அனுப்பியுள்ளார். அதேபோல், புதுக்குடியிருப்பிலுள்ள 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் உள்ளனர். இராணுவத்தினருக்கான காணிகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர்,  அங்கிருந்து வெளியேறி, மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கட்டளையிட்டுள்ளார்’ எனக் கூறினார்.