சென்னையில் காற்று விற்பனை

120 முறை சுவாசிக்கும் ஒட்சிசன் குடுவையின் விலை 975 ரூபா இந்தியாவில் முதல் முறையாக துாய்மையான ஒட்சிசன் எனப்படும் பிராண வாயு குடுவை விற்பனைக்காக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை, எழும்பூரில் இனவேட்டிவ் என்ற தனியார் நிறுவனம் ஒட்சிசன் குடுவைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஒரு குடுவையில் 120 முறை சுவாசிக்கும் அளவிற்கான 99.6 சதவீதம் துாய்மையான ஒட்சிசன் நிரப்பப்பட்டு உள்ளது. எளிதாக அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லும் வகையில் உள்ள அந்த குடுவையின் விலை 975 ரூபாயாகும்.

இதுகுறித்து நுரையீரல் மருத்துவ நிபுணர் திருப்பதி கூறியதாவது: டில்லி, சென்னை போன்ற மாநகரங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அதிகரித்து வருகிறது. துாய்மையான ஒட்சிசன் குடுவைகள் விற்பனைக்கு வந்துள்ள தகவல் வரவேற்கத்தக்கது.

ஆனால் குடுவைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் நல்லது. மூச்சு திணறல் உள்ளவர்கள், மலையேற்றம், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இக்குடுவைகள் பயனுள்ளதாக இருக்கும். நாள் முழுவதும் துாசி காற்றில் வெளியில் அலைந்து வருவோர் மருத்துவர் ஆலோசனையின் படி ஓரிரு முறை இக்குடுவையில் உள்ள ஒட்சிசனை சுவாசித்தால் புத்துணர்ச்சி பெற வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

(அண்மையில் என்னால் எழுதப்பட்ட ‘மழை வெள்ளம்…. மக்கள் வெள்ளம்…..’ என்ற தொடர் கட்டுரையில் இதனை ஒட்டிய எனது கருத்துப் பதிவை உள்ளடக்கியிருந்தேன் இன்று அந்த விடயம் செய்தியாக வந்திருக்கின்றது – சாகரன்)