தலைவர் கருணாநிதி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்: ஸ்டாலின் பேட்டி

2ஜி அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது குறித்து தலைவர் கருணாநிதியிடம் கூறியதும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்துசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினார். தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுடன் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின், தலைவர் கருணாநிதியிடம் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தார்.

கோபாலபுரம் இல்லத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:

”அநீதி வீழும், அறம் வெல்லும் என்று தலைவர் கருணாநிதி ஏற்கெனவே 2ஜி வழக்குபற்றி ஒரே வரியில் தெரிவித்து இருந்தார். அதன்படி, இன்றைக்கு வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தீர்ப்பின் மூலம் அநீதி வீழ்ந்திருக்கிறது, அறம் வென்றிருக்கிறது. நானும், திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும், தலைவர் கருணாநிதியிடம் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தோம். மிகுந்த மகிழ்ச்சியோடு பேராசிரியரிடமும், என்னிடமும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

திமுகவுக்கு எதிரான பல கட்சிகள் மட்டுமல்ல, பல்வேறு ஊடகங்களும் இணைந்து, திட்டமிட்டு திமுகவை களங்கப்படுத்த எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றனர். அதற்கு உதாரணமாக கடந்த நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்ட முடியும். ஆனால், இன்றைக்கு அது முறியடிக்கப்பட்டு இருக்கிறது. எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. திமுகவை களங்கமற்றது என்பது தீர்ப்பின் மூலமாக வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த தீர்ப்பு எதிரொலிக்குமா என்று கேட்கப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதி மக்களைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, ஆளுங்கட்சியாக இருந்தாலும், அதேபோல அதிலிருந்து பிரிந்துள்ள இன்னொரு அணியாக இருந்தாலும், அனைவரும் டெபாசிட் தொகையை இழக்கும் நிலையில்தான், 24 ஆம் தேதியன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவு இருக்கும். எனவே, தீர்ப்புக்கும் தேர்தல் முடிவுக்கும் தொடர்பில்லை” என்று ஸ்டாலின் கூறினார்.