த.தே.கூ உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாகினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் முதற் தடவையாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கு மாட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில்,

யாழ்ப்பாண மாவட்டம் – மாவை சேனாதிராஜா,
வவுனியா மாவட்டம் – செல்வம் அடைக்கலநாதன்,
கிளிநொச்சி மாவட்டம் – எஸ். ஸ்ரீதரன்
மன்னார் மாவட்டம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்
முல்லைத்தீவு மாவட்டம் – டாக்டர் எஸ். சிவமோகன்
மட்டக்களப்பு மாவட்டம் – ஜி. ஸ்ரீநேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இணைத் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தம்மிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது பற்றி எடுத்துக்கூறப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி ஆளும் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது.

தற்போதைய அரசாங்கத்திலும் ஆளும் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்கிலும் சில நாட்களிற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்;சேபனை காரணமாகவே எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.