பளை விபத்தில் ஐவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், வானில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான 55 வயது மதிக்கத்தக்க ஒருவரும் பலியாகியுள்ளனர். அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரும், உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வான் ஒன்றும் யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகமயை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே, இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.