மகேஸ்வரி நிதியத்தின் மீதான விசாரணை ஆரம்பம்

யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்துக்கு மகேஸ்வரி நிதியத்தினர் வழங்கவேண்டிய 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பான விசாரணை, கோப்பாய் பொலிஸார் மற்றும் இரகசியப் பொலிஸார் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி இறக்குவதற்காக பாரவூர்தி உரிமையாளர்கள் வழங்கிய 5,000 ரூபாய் அங்கத்துவ வைப்புப் பணம் மற்றும் ஒவ்வொரு முறையும் மணல் ஏற்றியிறக்கும் போது வழங்கிய 300 ரூபாய் சேமநிதி என 10 மில்லியன் ரூபாய் நிதியை திரும்பத் தரக்கோரி பாரவூர்தி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அத்துடன், மகேஸ்வரி நிதியத்தில் மணல் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட பாரவூர்திகளின் பணிகளை, மகேஸ்வரி நிதியம் நிறுத்தியதால், தங்கள் பெயரிலுள்ள நிதியை திரும்பவும் தருமாறு கோரி பாரவூர்தி உரிமையாளர்கள் கோரியிருந்தனர்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோருக்கு பாரவூர்தி சங்கத்தால் மகஜர் கையளிக்கப்பட்டது.

மேலும், இலங்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நிதியத்தின் மீது தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கீழ் செயற்படும் இந்த நிதியம், கடந்த காலங்களில் மணல் விற்பனை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.