மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கோரலில் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் தெரிவித்தார். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த 8 சபைகளுக்குமென 84 கட்டுப்பணங்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் 81 வேட்புமனுக்களே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகரசபை , காத்தான்குடி நகர சபை, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, போரதீவு பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றைய தினம் பகல் 12 மணியுடன் நிறைவடைந்தன.

இதன்படி 1.30 மணிவரையான ஆட்சேபணை தெரிவிக்கும் காலத்தினைத் தொடர்ந்து கட்சி களுக்கான கூட்டம் நடைபெற்று அறிவிப்புக்கள் வழங்கப்பட்டன. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலனும் கலந்துகொண்டார்.