வட்டவன் பகுதி விவகாரம் – எதிர்ப்பால் தீர்மானிப்பது இடைநிறுத்தம்

இப்பகுதியில் தொல்லியல் பகுதிகள் உள்ளனவா? என்பது தொடர்பாக, அதிகாரிகள், வியாழக்கிழமை (24) அன்று கள விஜயம் செய்துள்ளனர்.

வட்டவன் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான வயற்காணிகள் உள்ளன. இக்காணிகளின் நடுவில் சிறு குன்று பகுதியும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தொல்லியல் துறையினர், இப்பகுதியை தொல்லியல் பகுதி எனக்கூறி அறிவித்தல்  பலகை ஒன்றை நட்டிருந்தனர். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அது அகற்றப்பட்டது.

இந்நிலையில், வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 17ஆம் திகதி நடைபெற்றது. இவ்விடயம் ஆராயப்பட்டது. 

அப்போது, தொல்லியல் துறையினர், வனவள பாதுகாப்பு திணைக்களம்,வன ஜீவராசிகள் திணைக்களம்,பிரதேச செயலகம்,பிரதேச சபை என்பன இணைந்து குறித்த இடங்களைப் பார்வையிட வேண்டும்.  அது தொடர்பான அறிக்கை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறான நிலையில், வியாழக்கிழமை (24) காலை விஜயத்தின் போது, இறுதி முடிவை எடுக்கத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முயன்ற போது, பிரதேச சபை தவிசாளர் தனது ஆட்சேபனையை முன்வைத்து தீர்மானம் மேற்கொள்வதை இடைநிறுத்தம் செய்துள்ளார்.