வலி. வடக்கில் 6.1 ஏக்கர் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6.1 ஏக்கர் காணிகள், இன்று செவ்வாய்க்கிழமை (12) கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 26 வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஜே-226 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட 17 பேருக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் கனகராஜா ஸ்ரீமுருகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் உள்ள செம்பொன் வாய்க்கால் இந்து மயானம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காணிகளின் சொந்தக்காரர்களும் அதிகாரிகளும் காணிகளைப் பார்வையிட்டனர். இக்காணிகளிலிருந்த 7 வீடுகளும் தற்போதும் நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.