வவுணதீவு படுகொலை: பிணையில் விடுதலையானார் அஜந்தன்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி, வவுணதீவு காவலரணில் காவலில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் முன்னாள் போராளி அஜந்தன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அஜந்தன், தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வவுணதீவு பொலிஸாரை, சஹ்ரான் குழுவினரே கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதையடுத்து, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தத்கு அமைவாக, இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால், அஜந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்போது, அஜனந்தனை பிணையில் விடுதலை செய்த பதில் நீதவான், அவரை எதிர்வரும் 13ஆம் திகதியன்று மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.