வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்

  • இலங்கை உட்பட 13 நாடுகள் இணை அனுசரணை
  • 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு இலங்கை உட்பட 13 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்கப் படுத்தும் நோக்கில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றை முன்வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது. இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட நகல் வரைபு உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களில் விவாதிக்கப்பட்டு மாற்றங்களுடன் கடந்த 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நகல் பிரேரணைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, வடஅயர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

அமெரிக்காவுக்கான பிரதிநிதி நேற்றையதினம் இறுதிப் பிரேர ணையை சமர்ப்பித்தார். எந்தவொரு நாடும் பிரேரணைக்கு வாக்கெடுப்புக் கோராத நிலையில் ஏகமனதாக இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணைக்கு அவுஸ்திரேலியா உட்பட 13 நாடுகள் இணை அனு சரணை வழங்கியதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அனுசரணை வழங்கிய நாடுகளாவன;1. அல்வேனியா,2. அவுஸ்திரேலியா,3. ஜேர்மனி, 4. கிaஸ்

5. லதுவியா, 6. மொன்ரெனெக்றோ, 7. போலாந்து, 8. ரோமானியா, 9. இலங்கை, 10. மஷிடோனியா, 11. பிரிட்டன், 12. வட அயர்லாந்து,13. அமெரிக்கா

இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.

இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து உதவி வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

இலங்கை மீதான பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தயாராக உள்ளது.

இப்பிரேரணைக்கான உரிமையை சகல பங்காளர்களுடனும் பகிர்ந்துகொள்கிறோம். இதனை ஏகமனதாக நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கியமைக்கு சகல நாடுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள் வதாகக் கூறினார். இது விடயம் தொடர்பில் பரந்து பேச்சுவார்த்தை களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அரசியல் தீர்வுக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது அவசியம் என்பதை இப்பிரேரணை சுட்டிக்காட்டியிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த இந்தியப் பிரதிநிதி தெரிவித்தார்.

இந்தப் பிரேரணையை வரவேற்பது டன் சகல இனங்களும் சமத்துவத் துடன் வாழ்வதற்கான சூழ்நிலை உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.

ஒரு நாட்டை இலக்குவைத்து நிறைவேற்றப்படும் பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறிய சீனப் பிரதிநிதி, உள்ளகப் பொறிமுறையின் ஊடாக இந்த விடயங்களை இலங்கை தீர்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறியும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும், நாட்டை முன் கொண்டு செல்வதற்கு புலம்பெயர்ந்து வாழ் தமிழ் சமூகத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த தென்னாபிரிக்கா குறிப்பிட்டது. இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தென்னாபிரிக்கா மேலும் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேர வையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணையில் உள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச சிவில் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.