விமான நிலைய விஸ்தரிப்பு? மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது!

வலிகாமம் வடக்கு பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்பு பணகளுக்காக பொதுமக்களின் நிலங்களை சுவீகரிக்கும் எண்ணம் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கோப்பாய்- செல்வபுரம் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட்டுவரும் வீட்டுத்திட்டப் பணிகளை இன்றைய தினம் அமைச்சர் பார்வையிட்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சரிடம், பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புக்காக மக்களின் காணிகள் எடுக்கப்படுவது தொடர்பாக கேட்டபோதே அ மைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்தியா, இலங்கைக்கு இடையில் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் பலாலி விமான நிலையத்தை விஸ்த்தரிக்க முயற்சிக்கிறோம்.

இதில் மக்களுடைய காணிகளை எடுக்கப்போவதில்லை. மாறாக இருக்கும் விமான நிலையத்தையே விஸ்தரிக்கவுள்ளோம். மேலும், வலி,வடக்கு முகாம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் கேட்டபோது, முகாம் மக்களின் உண்ணாவிரத போராட்டத்தை என்னால் நிறுத்த முடியாது. அந்த மக்கள் தங்கள் காணிகள் எங்குள்ளது என கூறினால் அவற்றை பெற்றுக் கொடுக்கலாம்.

அந்த மக்களுடைய காணி படையினர் வசம் உள்ளது என கூறியபோது அது எனக்கு தெரியாது. அதைப்பற்றி நான் பேசவில்லை என அ மைச்சர் கூறினார். இந்தநிலையில் அதற்குப் பதிலளித்த அமைச்சின் செயலாளர், ஐனாதிபதி தலமையில் பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதாவது மீள்குடியேற்றத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காணுமாறு. எனவே அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் அதை குறித்து சிந்திக்கலாம் என கூறினார்.