அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது குறித்த தனது அச்சுறுத்தல்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகங்களில், ‘பின்வாங்குவதற்கில்லை’ என்றும், ‘கிரீன்லாந்து மிகவும் அவசியம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்காக எந்த அளவிற்குச் செல்லத் தயாராக இருக்கிறார் என்று டிரம்பிடம் கேட்கப்பட்டபோது, ”நீங்களே தெரிந்துகொள்வீர்கள்” என்று பதிலளித்தார்.
இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ‘விதிகளற்ற உலகத்தை நோக்கிய மாற்றம்’ குறித்து எச்சரித்தார். அதே நேரத்தில், கனடா பிரதமர் மார்க் கார்னி, ‘பழைய ஒழுங்குமுறை மீண்டும் வராது’ என்று கூறினார்.
டிரம்ப் புதன்கிழமை டாவோஸுக்கு ( Davos, Switzerland ) வரவிருக்கிறார். அங்கு, ‘கிரீன்லாந்து தொடர்பாகப் பல சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன’ என்று அவர் கூறியுள்ளார்.
நீண்ட நேரம் நீடித்த செய்தியாளர் சந்திப்பின் போது, கிரீன்லாந்தில் “விஷயங்கள் மிகவும் சிறப்பாக நடக்கும்” என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேட்டோ கூட்டணியின் சாத்தியமான பிளவு என்பது கிரீன்லாண்டிற்காக ஜனாதிபதி கொடுக்கத் தயாராக இருக்கும் விலையா என்று பிபிசி கேட்டபோது, அவர், “எல்லா வகையிலும், என்னை விட நேட்டோவிற்காக வேறு யாரும் அதிகம் செய்ததில்லை,” என்று பதிலளித்தார்.
மேலும், “நேட்டோ மகிழ்ச்சியாக இருக்கும், நாங்களும் மகிழ்ச்சியாக இருப்போம்,” என்று கூறி, “உலகப் பாதுகாப்புக்கு அது நமக்குத் தேவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், தேவைப்பட்டால் நேட்டோ அமெரிக்காவிற்கு உதவிக்கு வருமா என்பதை அவர் முன்னதாகவே கேள்விக்குள்ளாக்கினார்.”நாங்கள் நேட்டோவின் உதவிக்கு வருவோம் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர்கள் எங்கள் உதவிக்கு வருவார்களா என்பதை நான் உண்மையிலேயே கேள்விக்குள்ளாக்குகிறேன்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
(Kunapalan Selvaratnam)