PTA தொடர்பில்: ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அடிப்படை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இந்தச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். நீண்டகாலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் இந்தச் சட்டத்தை நீக்கி, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டார்.

 அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக மிகவும் வலுவான புதிய சட்டமொன்றை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும்போது, கீழமை நீதிமன்றங்களின் கட்டமைப்பு சிதையாத வகையில் அதனை முன்னெடுக்க வேண்டும். உயர் நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை மிகக் குறுகிய காலத்திற்குள் நிரப்ப முடியும். அதேபோல், குற்றவாளிகள் அனைவரையும் உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்துவோம். காலத்தின் மணல் மேடுகளால் எதையும் மூடி மறைக்க நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பற்றிய தகவல்கள்:

அறிமுகம்: இச்சட்டம் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

நோக்கம்: அக்காலகட்டத்தில் நாட்டில் நிலவிய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகச் சட்டமாக இது அறிமுகமானது.

நீடித்த தன்மை: தற்காலிகச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், 1982 ஆம் ஆண்டில் இது நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டது.

முக்கிய விமர்சனங்கள்: மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தினால் இச்சட்டம் நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிணையின்றி நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைத்திருத்தல், சுயவிருப்பின்றிப் பெறப்படும் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்படுதல் போன்றவை இச்சட்டத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாக உள்ளன.

Leave a Reply