இரண்டாவது கைதும் தப்புதலும் – பெண் போராளியின் வாக்குமூலம் (2)

புலிகளின்  இருபாலை பெண்கள் முகாமின் சிறையில் சிவகாமி இருந்த போது தான் இந்திய இராணுவத்தினரால் உணவுப்பொட்டலங்கள்  வானூர்தி மூலம் போடப்பட்டது. இதை அங்கிருந்த பெண் போராளிகள் சிலர் மிகவும் சந்தோசமாக எடுத்துக் கொண்டார்கள். இனி தமிழர்களுக்கு விடிவு வந்து விடப்போகிறது என்ற பார்வையில். இந்தியாவின் ஆக்கிரமிப்பு அரசியலை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவர்களின் பேச்சுக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. அவர்கள் எல்லோருமே ஆயுதப்பயிற்சிக்கு  உட்படுத்தப்பட்டவர்கள் தான். வேறு எந்த விதமான அரசியல் சித்தாந்தமோ தர்மமோ போதிக்கப்படவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளும் பேச்சுக்களுமிருந்தது. ஆமாம்  சில  போராளிகளின் தனிமனித தேடல்களும் தர்ம சிந்தனையும் தான் அங்குள்ளவர்களின் நடவடிக்கைகளில் தெரிந்தது. சரியான போதனையற்ற ஆயுதப்போராட்டமே உயிர்களையும் உடமைகளையும் மதிக்காது கொடிய அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது என்பது தான்  சிலரால் சீரணிக்க முடியாத உண்மை.

இந்திய இராணுவத்தின் வருகைக்குப் பின் மக்கள் இடம்பெயர்வுகளை மேற்கொண்டார்கள். சமாதான அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்தியப்படை செய்த கொடுமைகளை அனுபவித்தவர்களுக்கு தெரியும். இதை விரிவாகப் பேசவேண்டியதில்லை. ஆனால்  சிவகாமிக்கு ஏற்பட்ட இந்திய இராணுத்தின் அனுபவம் விடுதலைக்கு போராட வெளிக்கிட்டவர்களுக்குப் புரியும். 1988 தை மாதம் இந்திய அமைதிப்படை சிவகாமியின் ஊரான புதுக்குடியிருப்பை ஓர் குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி வளைத்தது. இந்த இந்திய அமைதிப்படைக்கு பயந்து மக்கள் ஏற்கனவே இடம்பெயர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த இடங்களில் வாழ மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டிருந்தார்கள்.

சிவகாமியின் குடும்பமும் இடம்பெயர்ந்திருந்தாலும் சாப்பாட்டுக்கான தேவைக்காக சிவகாமியும் தந்தையாரும்  அடிக்கடி  சொந்த ஊருக்கு வரவேண்டியிருந்தது. சிவகாமியின் குடும்பம் பரந்தனில் இடம்பெயர்ந்திருந்தார்கள். 22 மைல்கள் தூரம். அப்போது ஓர் காலை 9-10 மணியளவில் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட  மக்கள்  ஓர் பாடசாலையில் அடைத்து வைக்கப்பட்டார்கள். அப்போ இந்திய இராணுவத்தில்  இந்தியத் தமிழர்கள் சிலரும் இருந்த படியால்   இந்தி பேசும் சிப்பாய்கள் தான் தலைமைத்துவதிலிருந்தார்கள். தமிழ்பேசும் சிப்பாய்கள் மக்களுக்கு ஆறுதலாக இருந்தார்கள். ஆனால் அவர்களும்   மக்களுடன் பேசுவதற்கு பயந்து பயந்தே இருந்தார்கள். ஆனாலும் மக்களுக்கு தைரியம் தந்து கொண்டிருந்தார்கள். சிவகாமியுடன் சேர்த்து சிவகாமியின் உறவினர்களும் பிடிபட்டார்கள். அதில் புலிகள் இயக்கத்திலிருந்த ஜெயா என்பவரும் இருந்தார். இந்த ஜெயா என்பவரே   முதல் தடவை சிவகாமியை புலிகள் கைது செய்வதற்கு  புலிகளுக்கு புலனாய்வு வழங்கியவர். அவரின் தாயார் மிகவும் பயந்து போயிருந்தார். சிவகாமியினால் தனது மகன் காட்டிக்கொடுக்கப்பட்டு விடுவார் என்று. ஆனால் சிவகாமி யாரையும் காட்டிக் கொடுக்கவோ யாரையும் துன்பத்துக்குட்படுத்தவோ இல்லை. ஆனால் அங்கிருந்தவர் அவர் கண்ணன் அவர் பெயர் அவர் சிவகாமியை EPRLF இயக்கம் என்று காட்டிக்கொடுத்து விட்டார். சிவகாமி அந்த இயக்கத்தில் பயிற்சியோ அல்லது பதிவு செய்த  இயக்க உறுப்பினரோ இல்லை. மக்கள் நல மருத்துவச்சங்கத்தில்  வேலை செய்த ஓர் தொழிலாளி மாத்திரம் தான். அந்த நேரம்  EPRLF  இந்திய இராணுவத்துடன் சேர்ந்திருந்தபடியால் சிவகாமி எதுவும் பயமும் கொள்ளவில்லை. ஆனால் நிலைமை அதற்கு எதிர்மாறாக அமைந்திருந்தது. இந்திய இராணுவத்திலிருந்த 2 இராணுவ வீரர்கள்  வந்து யார் என்று சிவகாமியின் உண்மையான  பெயரைச் சொல்லிக் கேட்டார்கள். உங்களை தலைமைச் சிப்பாய்  விசாரணைக்காக அழைப்பதாக சொல்லி அழைத்தார்கள். அத்தோடு வேறு சில பெண்களும் ஆண்களும் விசாரனைக்காக  சிவகாமியுடன் அழைத்துச் செல்லப்படார்கள். விசாரணை செய்யப்பட்ட இடம் குடிசைகள் அடங்கிய ஓர் இடம். அங்கே மக்கள் நிறைய பதுங்கு குழிகளையும் வெட்டி வைத்திருந்தார்கள்.

விசாரணையின் போது சிவகாமி தான் எந்த இயக்கமும் சார்ந்தவரல்ல என்பதை சொன்னபோதும் அந்த இராணுவ கப்டன் விடவில்லை. நீ பொய் சொல்லுகிறாய் என்று சொன்னார். அதை தமிழ் இராணுவ வீரர்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த விசாரணையில் அந்த தமிழ் இராணுவீரர் நிலைமை மோசமாவதை உணர்ந்தார் போலும் அவர் உன்னை EPRLF  இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று காட்டிக்கொடுத்துத் தான் பிடித்திருரக்கிறார்கள்  நீ உண்மையைப் பேசு என்று கூறினார். அதன் பிறகு சிவகாமி தனது முழு விபரத்தையும் கூறியபடியால் தப்பக்கூடியதாகவிருந்தது. அங்கே 2 ஆண்களை  தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு  விசாரணைகள் நடந்துகொண்டிருந்தது. நிறையப் பெண்களையும் கடுமையாக விசாரணை செய்தார்கள். கடைசியாக விசாரணை முடிந்தபின் விசாரித்த எல்லோரையும் பதுங்குகுழிக்குள்  தள்ளி விட்டார்கள். அந்த நேரம் அந்த அமைதிப்படையில் இருந்த தமிழ் சிப்பாய்கள் இராஜசேகர், இராஜகோபால் அவர்கள் இருவரும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள். அவர்கள் சிவகாமி போன்ற பெண்களுக்கு கூறிய வார்த்தைகள் உங்களுக்கு எதுவும் நடக்கலாம் ஆனால் நாமிருவரும் எம்மால் முடிந்தவரை காப்போம் என்றார்கள். அவர்கள் எம்மை மிகவும் பாதுகாத்து எந்தக் களங்கத்துக்கும் உட்படுத்தாமல் பாதுகாத்த தெய்வங்கள். ஆண்கள் சித்திரவதை செய்யப்பட அங்கு ஓடி அவர்களைக் காப்பாற்ற  அவர்கள் பெரிதளவு முயற்சி எடுக்கவில்லை. அவர்கள் எம்மைக் காப்பதிலேயே குறியாயிருந்தார்கள். அவர்கள்  என்றும் வணக்கத்துக்குரிய தெய்வங்கள் சிவகாமியினால் நினைவு கூரப்படும் அற்புத ஜீவன்கள். அவர்களை சிவகாமி முகநூலில் தேடுவது இன்றும் தொடர்கிறது. சிவகாமிக்கு நிறைய பேர் உதவியிருக்கிறார்கள். அவர்களில் பலரை சிவகாமி முகநூலில் தேடியே அவர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்திருக்கிறாள். ஆனாலும் இந்த காவல் தெய்வங்களை இன்னும் அவளால் தேட முடியவில்லை. அவர்களுக்கு அவளின் செய்தி  இக்கட்டுரையூடாக நன்றிகள் என்று வார்த்தையில் சொன்னால் மட்டும் போதாது. அதுமிகவும் மதிக்கத்தக்கதும் ஆத்மாவின் தாகமும். அவர்கள் எங்கிருந்தாலும் வாழ சிவகாமி இந்த பிரபஞ்சத்தில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் அவளின் இறுதி மூச்சு வரை பதிவு செய்து கொண்டேயிருப்பாள். இந்திய அமைதிப்படையினரால் தை மாதம் 4ம் தேதி பிடிக்கப்பட்டு 8ம் தேதி எல்லோரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஏதோ நிம்மதியோடு சிவகாமியும் விடுதலை செய்யப்பட்டாள்.

சிவகாமியும் தந்தையாரும் பரந்தனுக்கும் புதுக்குடியிருப்புக்குமாக போய் வந்துகொண்டிருந்தார்கள். அடிக்கடி செல்வது வாழ்வாதாரத்துக்காக தான். இந்தவேளை சிவகாமி தேவிபுரத்துக்கு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது விடுதலைப்புலிகளின்  அரசியல் பொறுப்பாளர்   வண்ணன் என்பவரால் நடுவீதியில் வைத்து விசாரணைக்காக  கைவேலி என்ற இடத்தில்  கூட்டி செல்லப்பட்டார். அது ஓர் வயல் தோட்டவெளி. வீடுகள் அவ்வளவாக இல்லை. 11.01.1988 இந்த கடத்தல். அதாவது தனியாக வந்த வண்ணன் விசாரணை இருப்பதாக கூட்டி சென்று ஓர் வயலுக்குள் விட்டார். அந்த வயலில் சிவகாமியுடன் ஒன்றாகப் படித்தவர் பாலகிருஸ்ணன் இருந்தார். அவர் சிவகாமியுடன் எதுவுமே பேசவில்லை. விசாரணைக்கு வண்ணன்  கூட்டி சென்றபோது இந்திய இராணுவத்தின்  விசாரணை பற்றி ஏதோ கேட்கப்போவதாக தான்  சிவகாமியின் எண்ணம். ஆனால் புலிகளும் புலி ஆதரவாளர்களும் காற்றைக்கூட சந்தேகித்து  துப்பறியும் பேர்வழிகளாயிற்றே. அன்று பகல் முழுவதும் அந்த வயலிலே வைக்கப்பட்டு சிவகாமி இரவு ஆண் உடுப்பு உடுத்தி வயல்வெளிகளுக்கூடாக  கோம்பாவில் என்ற இடத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டாள். இந்தக் கைதுக்கு காரணம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மகாலிங்கம் இவர் கிளிநொச்சியில்  ஓர் வங்கியில் வேலை பார்த்தார். இவர் சிவகாமியை  பரந்தனில் பேரூந்தில் அடிக்கடி சந்தித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் கிளிநொச்சியில் மூன்று இயக்கங்கள் சேர்ந்து (three star) என்ற பெயருடன் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய காலகட்டம். இந்த மகாலிங்கம் என்பவர் மல்லி என்பவரின் தாய் மாமன். மகாலிங்கத்தின் வீடு புலி இயக்கத்தினரின் வீடுமாதிரியே இருந்தது. பாலகிருஸ்ணன் என்பவரும் மல்லியின் உடன்பிறவாத சகோதரர். வண்ணன் என்பவர் அந்த வீட்டு மாப்பிள்ளை மாதிரி அங்கேயே தங்கியிருந்தவர் அப்போது. சிவகாமியை பரந்தனில் பார்த்ததை மகாலிங்கம் மல்லி வண்ணன் என்போரோடு கூடிப்பேசி விவாதித்து தான் இந்தக் கைது ஏற்பட்டது. அப்போது புலிகள் இயக்கம்  தலைமைக்குத் தெரியாத குடும்பங்களின் இயக்கமாகவும் இருந்தது. மாத்தையாவும் மல்லியின் அண்ணணும் ஒரே குடும்பத்தில் பெண்ணெடுத்தபடியால் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று என்ற இடத்தில் ஏற்படுத்தப்பட்ட கைது இது. கைதின் நோக்கம் முக்கூட்டு இயக்கத்துக்கு தகவலளிப்பவர் என்றுதான். சிவகாமி மனோ மாஸ்டரின் பாசறையில் வளர்க்கப்பட்ட மனிதநேயத்துக்கு சொந்தக்காரி என்பது புலிக்கூட்டத்துக்கு எப்படிப் புரிந்திருக்கும். அதைவிட கொள்கை சித்தாந்தம் என்பதே என்ன என்று புரியாதவர்களுக்கு எப்படி தெரியும் சிவகாமி பற்றி.

கோம்பாவிலுக்கு கூட்டிச் செல்லப்பட்ட சிவகாமி  பெண்கள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டாள்.  இந்த  வீடும் சிவகாமிக்குத் தெரிந்தவர்களின் வீடு தான். ஆனால் அந்த இடத்துக்கு ஒருநாளும்   சென்றதில்லை.  போனது இரவு. அன்றிலிருந்து விசாரணை பல தொடங்கியானது. இரவு அந்த பெண்கள் வேறு இடத்துக்கும் கூட்டிச் செல்வதுண்டு. அது அந்தப்பகுதியில் தான். குறிப்பாக  எந்த இடம் என அவளுக்குத் தெரியாது. சிவகாமிக்கு இந்த விசாரணை என்பதும் கைது என்பதும் மிகவும் வேதனையைக் கொடுத்தது. மிகவும் அழுதும் விட்டாள். இந்தப் பெண்கள் முகாமில் அவளுடன் TELO விலிருந்த சுபாங்கியும் இருந்தா. அவ சிவகாமியுடன் எதுவும் பேசவில்லை. அந்த சுபாங்கி மிகவும் இரக்க சுபாபமுடையவர். பாசையூரைச் சேர்ந்தவர். அதுவும் TELO வில் இருந்த போது மிகவும் நல்ல தோழியாக இருந்தவர். நிறைய குடும்ப விடயங்கள் கூட பேசிய தோழி சுபாங்கி. ஆனால் சிவகாமியுடன் எந்தக் கதையும் இல்லை. பார்த்தார் அவ்வளவு தான். சிவகாமி அழுதது மிகவும் சுபாங்கியை வருத்தியிருக்கும். ஏனெனில் அவ்வளவு மென்மையும் அன்பும் கருணையும் கொண்ட சுபாங்கி ஆயுதம் தூக்கியதே மிகவும் துன்பத்துக்குரிய மாறா வடு. விடுதலை என்று வெளிக்கிட்டு பிழையான தலைமைகளிடம் தள்ளப்பட்ட ஒவ்வொரு போராளியுமே பாவப்பட்ட ஜென்மம் தான். சுபாங்கியும் இன்று உயிரோடில்லை.

சிவகாமியைச் சிறை வைத்திருந்த வீடு மண்வீடு தான். சமையலறை வேறாக ஓர் குடிசை. வீட்டுக்கு கதவு இருந்தது. மற்றப்படி நிறைய தென்னைமரங்கள் இருந்தன. பெரிய  காணி அது. காணியின்  நுழைவு வாயிலுக்கும் வீட்டுக்கும் கணிசமான தூரம். நுழைவு வாயிலில்  அதாவது அங்கு அதைப் படலை என்பார்கள் (gate). பெண் போராளிகள் சிலர் இரவு பகலாக காவலிலிருப்பார்கள். வீட்டுக்கு கிட்ட இருக்கும் போராளிகளுடன் அப்போதைய தொலைத்தொடர்பு சாதனத்துடன் தான் தொடர்பு கொள்வார்கள்.  பகல் முழுக்க விசாரணை. பலபேர் பலமுறைகளில் பலகோணங்களில் கேள்விகள் கேட்டு துளைத்தெடுப்பார்கள். எப்போதும் விசாரணையின் போது அடிப்பதற்கும் ஆள் தயாராக இருக்கும். அது பயமுறுத்தவா இல்லை தேவைக்குப் பயன்படுத்தவா என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். பெண் போராளிகள் என்றாலும் அவர்கள் எல்லாவற்றுக்கும் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

13.01.1988 இரவு  படுக்கை்ககுப் போக முன்பு  இருளும் தொடங்கிய நேரமது சமையலறைக்குடிசையில் சிவகாமி  இருத்தப்பட்டிருந்த வேளை அந்தக் குடிசைக்குப் பின் புறத்தில்  தீபாவும் சிவகாமியின் ஆரம்பகாலத் தோழி இயக்கத்துக்கு கூட்டிச் சென்றவரும் மல்லியும் பேசிக்கொண்டிருந்ததை சிவகாமியினால் கேட்கக்கூடியதாக விருந்தது. அவர்கள் பேசிக்கொண்டவிடயம் சிவகாமி பற்றியது தான்.  மல்லி  தீபாவிடம் ஏன் இவ இப்படி செய்கிறா எங்களுக்கெதிராக என்றும் முதல் கைதின்போது என்ன நடந்தது என்றும் கேட்க அதற்கு  தீபா அண்ணை (பிரபாகரன்) கதைத்துத் தான் வெளியில் விடப்பட்டது ஆனால் அவவின் நடவடிக்கைகள் மிகவும் சந்தேகமாக இருக்கிறது என்றார். அதற்கு மல்லி நாளை அதாவது மாத்தையா வருவதாகவும் அவர் விசாரணையை மேற்கொண்டு என்ன செய்வது என்று முடிவெடுப்பதாகவும் பேசிக்கொண்டார்கள். இந்த மாத்தையா இருபாலை பெண்கள் முகாமுக்கு வந்து விசாரணை மேற்கொள்ளவில்லை. ஆனால் அடைத்து வைத்த அறைக்குள் வந்து பார்த்த கொடூரப்பார்வை இன்றும் நிழற்படம் போலிருக்கிறது சிவகாமிக்கு .அதன் வீரியம் இந்தமுறை எப்படி இருக்கும் என்பதை  ஓரளவு புரிந்து கொண்ட சிவகாமி இவர்களிடமிருந்து விடுதலை கிடைக்காது என்றும் துரோகிப்பட்டத்துடன் மரண தண்டனை என்பது தான் என்பதையும் புரிந்து கொண்டாள். ஏனெனில் அவர்களுக்கு தங்களைப் பாதுகாப்பதே   இந்தியப்படைகளிடமிருந்து மிகவும் கடினமாக இருந்தது. இந்நேரம் இப்படியொரு கைதி மிகவும் பாரமாக இருந்ததை தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. இந்தப்போராளிகள் சிவகாமியின் அன்றாட வாழ்க்கை பற்றி எதுவுமே சிந்திக்கவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. சிவகாமியின் குடும்பவறுமை பற்றி மிகவும் அறிந்தவர்கள் மல்லியும் தீபாவும். அவர்களுக்கு அப்போது அதைப்பற்றி சிந்திக்கும் சக்தியில்லாமல் போய்விட்டதா இல்லை அப்படியே சந்தேகத்தைக் கக்கும் மனோபாவத்துடன் வடிவமைக்கப்பட்டார்களா என்பது மிகவும் விந்தைக்குரியது தான். ஏனெனில் தனிமனித சிந்தனைகள் இல்லாமல் ஓர் குழுவுடைய சிந்தனைகளை மட்டும் தான் அங்கே பார்க்க முடிந்தது. ஒரு தனிமனிதன்  குழுமனோபாவத்தினின்று மிகவும் மாறுபட்டவன். அவன் எப்போதும் பலகோணங்களில் சிந்திக்கக்கூடியவன். நியாய தர்மங்களை பற்றி சிந்தித்து  முடிவெடுக்கக் கூடியவன். இந்த மல்லி – தீபா உரையாடலுக்குப் பின் எப்படியாவது தப்பி விடவேண்டுமென்ற  ஓர் எண்ணம் சிவகாமிக்குத் தோன்றியது.

14.01.1988  மாத்தையாவின் வருகைக்காக   மிகவும் பயத்துடன் எதிர்பார்த்திருந்தாள். அன்று இரவு மாத்தையா பெண்கள் முகாமுக்கு அருகிலும் வந்து விட்டார். அப்போது தான்  அந்தப் பெண்களின் தொலைபேசி உரையாடலில் இராணும்  கிட்ட வந்து கொண்டிருப்பதாகவும் அதனால் மாத்தையாவின் வருகை தடைப்பட்டதாகவும் பேசிக்கொண்டார்கள். இது பெரிய தற்காலிக நிம்மதியாகவிருந்தது. அன்றே சிவகாமி சில தீக்குச்சிகளை சேர்த்து வைத்துக்கொண்டாள் வெளியேறும் எண்ணத்துடன். இரவில் அடைத்து  வைக்கும் குடிசைவீட்டை அவர்கள் பூட்டுவதில்லை. ஆனால் வாசலில் எல்லோரும் படுத்திருப்பார்கள். ஏதாவது வெளியில் போகவேண்டுமென்றால் அவர்களை எழுப்பி தான் அவர்களின் காவலுடன் போகவேண்டும். ஏற்கனவே அப்படித்தான் நடந்தது. ஆனால் 14ம்திகதி இரவு அவர்களை எழுப்பாமலே தப்பும் நோக்கோடு மெதுவாக வெளியேறினாள் சிவகாமி. இதை எழுதும் போதே அன்று பட்ட துன்பம் இன்றும் நெஞ்சில் திக்திக்கென்றிருக்கிறது. இதை வார்த்தைகளில் வடிப்பதென்பது மிகவும் கடினமானது ஏனெனில் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் தூரம் மிகப் பெரியது சிவகாமியின் எண்ணம் தான் வெளியேறி தனது   அயல்வீட்டாரின் வீட்டுக்குப்போய் பாதுகாப்பு தேடிக்கொள்வதும் பின் தந்தையைத் தொடர்பு கொண்டு எங்காவது மாறி மறைந்து வாழ்வதும் தான். அவள் நினைத்து வெளியேறிய திசைக்கு எதிர்திசையில் மாறிச்செல்வதை அவளால் நீண்ட நேரத்துக்கு புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அங்கு சிந்தைனையும் தடைபட்ட நிலையே. எங்கிருக்கிறோம் நான் தேடிவந்த பாதை இவ்வளவு தூரத்திரலில்லை என்பது ஓரளவு  உணரத்தொடங்கியவள். எதிர்ப்புறமாக சென்று கொண்டிருப்பது வயல்பிரதேசம் என்பதை உணர்ந்தாள். எதுவும் செய்யமுடியாது காலில் செருப்பில்லை  முட்கள் கல்லுகள் கால்களையும் பதம்தான் பார்த்தது.  அது பாண்டியன் வெளி என்று அழைக்கப்படும் இடம் வயல்வெளியில் காவலுக்காக தீயை ஏற்படுத்தி காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளை வயல்வரம்புகளில் தடுக்கி விழுந்து ஓர் வயது முதியவரிடம் போய் சேர்ந்தாள். இவையெல்லாமே தானாகவே நடந்து கொண்டிருந்தது. தனது  தகப்பனாரின் பெயரைச்சொல்லி தான் விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பி வந்ததையும் கூறி தனக்கு வழிகாட்டும்படி கேட்டுக்கொண்டாள். அவளின் தகப்பனார் அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த ஒருவர் என்பதால் அவரும் உதவி செய்தார். அவர் தனது வயல் வெளியிலிருந்து கொஞ்சதூரம் நடந்து வந்து இரணைப்பாலை – புதுக்குடியிருப்பு  பிரதான பாதையைக் காட்டி விட்டுச்சென்றார். அவரின் பெயர் ஆசைமுத்து அல்லது ஆசைப்பிள்ளை என்பது  பின்பு பலவருடங்கள் கழித்து அறிந்து கொண்டாள். அவர் உயிரோடு இல்லை என்பதும் தெரிந்தது. அவரின் ஆத்மசாந்திக்காக சிவகாமி இப்போதும் அந்த ஜயாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று  தினமும்  பிராத்தனை செய்கிறாள். தன் பெற்றோருக்குச் செலுத்தும் பிரார்த்தனையின் போது. இவையெல்லாம் வாழ்வில் நன்றியோ பிரார்த்தனையோ செய்து ஈடுகட்டி விடமுடியாதவை.

முதலாவதாக செல்லவேண்டிய இடம் மாறிவிட்டது. இப்போ இரண்டாவதாக தனது சித்தப்பாவின் வீட்டுக்கு செல்லமுடிவெடுத்து  ஓர் குறிப்பில் சிவகாமி சென்று கொண்டிருந்தாள். அது நீண்ட தூரம் நீண்ட இரவுமாக விருந்தது. பிடிபட்டால் என்ன நடக்கும் என்ற சிந்தனை கூட இல்லாமல் தப்புவது என்ற நோக்கம் மட்டுமே மனதை ஆக்கிரமித்திருந்தது அந்த நேரம்.  புதுக்குடியிருப்புச் சந்திக்கு சென்றால் இராணுவத்திடம் அகப்பட வேண்டிவரும் என்று நினைத்து ஆனந்தபுரம் செல்வதற்கான குறுக்குப்பாதையை தேர்வு செய்து நடந்தாள். இந்த இடங்களுக்கு அவள் சென்றதில்லை ஆனால் ஓர் குறிப்பில் தான் பயணம் தொடர்ந்தது. பாதை மீண்டும் மாறத்தொடங்கியது புரியத்தொடங்கியது. கையிலிருந்த நெருப்புக்குச்சிகள்  காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அணைந்தன. இருந்த குச்சிகளும் முடிந்து விட்டது. ஒரே கும்மிருட்டு.தனியாக ஒரு பெண்.அந்த வழிகாட்டிய முதியவரைத்தவிர எங்கும் ஆட்களைக் காணவுமில்லை. எப்படியும் 7-8 மைல்களாவது இருக்கும் நடந்து வந்த பாதை.  ஓரளவு பாதையின் போக்கை  புரிந்து கொண்டவள் பிரதான பாதையைத் தேர்தெடுத்து மிகவும் அவதானமாக ஏதாவது வெளிச்சம் வருகிறதா எனப் பார்த்தவாறே நடந்து சித்தப்பாவின் வீட்டுக்குச் செல்ல வந்து கொண்டிருந்தாள்.

இந்தவேளை தான் சிவகாமி வேலைசெய்த மக்கள்நல மருத்துவச்சங்கத்தின் அங்கத்தினர் வீட்டில் வெளிச்சம் தெரிந்தது. அக்கணமே முடிவை மாற்றி அவரின் வீட்டுக்கு சென்று நடந்தவை எல்லாவற்றையும் கூறி அடைக்கலம் தேடினாள். இந்த மனிதரின் பெயர் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டிய ஒன்று. சூசைப்பிள்ளை -வவி குடும்பம். இவர்களுக்கு பெண்பிள்ளைகள் 5 பேர்கள். ஆண்பிள்ளைகள் இல்லை. பெரிய வசதிபடைத்தவர்களில்லை. ஆனால் அவர்களின் உள்ளம் பெரிய சீமானைப் போன்றது. அவர் ஓர் புரட்சிகர சிந்தனையாளர். யாரையும் கோபமாக ஏசியதோ சண்டை போடுகிறத ரகமோ இல்லை. அவர்கள் தங்களின் ஒரே ஒரு அறைக்குள்  சிவகாமியை தன் பிள்ளைகளுடன் சேர்த்துப்பாதுகாத்தார்கள். 4-5 நாட்கள் பாதுகாத்த அவர்கள்  பலவழிகளில் கிளிநொச்சிக்கு கடத்த முயன்று கத்தோலிக்க குருவிடமும் உதவி கேட்டிருந்தார்கள். அதற்கு குருவானவர் தன்னையும் இடையில் புலிகள் கண்டால் தனது   வாகனத்தையும் பயன்படுத்துவதால் பாதுகாப்பற்றது எனக்கூறியிருக்கிறார். இந்த வவியக்கா 2009 போரின்போது  இறந்து விட்டார். சுவையோடு சமைத்துத் தந்து இரவில் குளிக்க விட்டு காவல் காத்து நின்ற அந்த வவியக்காவை கடைசி வரைக்கும் சந்திக்க முடியாமலே போய் விட்டது. இது துன்பம் என்பதை விட மாளாத்துயரம். இவர்களுக்கு என்ன செய்து சிவகாமி தன் கடனைச் செலுத்த முடியும்?. வெறும் பணமா? அது எல்லாவற்றுக்கும் மாற்றா? இந்தப் புதிருக்கு விடையே இல்லை. மந்துவில் சிவகாமி இருந்த இடம் அங்கிருந்து அவரின் பெறாமகன்  தாசன்  என்பவருடன் சைக்கிளில் வட்டக்கச்சி என்ற இடத்துக்கு மாற்றப்பட்டாள் சிவகாமி. இப்போதும் புலிகளின் ஆண் உடைமாற்றம் தான் பயன்பட்டது. இந்த தாசன் என்பவருக்கும் சிவகாமியின் இதயம் நிறைந்த நன்றிகள். மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டிய விடயம் இந்த நன்றி மட்டும் அவர்கள் செய்த அர்ப்பணிப்புகளுக்கு ஈடாகாது. அந்தநேரம் அவர் பிடிபட்டிருந்தால் அவரின் நிலை எப்படியிருந்திருக்கும் என்பது எல்லோராலும் புரியக்கூடியது. வட்டக்கச்சியிலிருந்து அவளின்  தகப்பன் அப்போ இடம்பெயர்ந்திருந்த இடம் முரசுமோட்டை அங்கு ஓர் பத்து நிமிடங்கள் குடும்பத்தினரைச் சந்தித்து சிவகாமி  கிளிநொச்சிக்கு இடம்மாற்றப்பட்டாள். சிவகாமி தப்ப முன்பு தனது அயலவர் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்ததும் அது பாதை மாறியதால் விடப்பட்டது. ஆனால் சிவகாமி தப்பியவுடன் அந்த வீடும் சோதனை போடப்பட்டது. அவளின் சித்தப்பா வீடும் சோதனையிடப்பட்டது. அதைவிட சிவகாமி செல்லும் நண்பர்கள் வீடுகளும் சோதனை   செய்யப்பட்டன. அன்று பிடிபட்டிருந்தால் இந்தக் கதைக்குரியவர் துரோகியாக இன்றும் பேசப்பட்டுக்கொண்டிருப்பார். சில செயல்கள் மனிதனைத்  தாண்டியும் நடைபெறுவது என்பது மறுக்க முடியாது. வாழ்வில் ஏற்படும் அனுபவங்கள் புதிய பார்வையையும் சிந்தனைகளையும்  உருவாக்கி விடுவது என்பது என்னவோ அவளைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க உண்மை. பிரபஞ்சத்தின் விளையாட்டு, அனுபவம் அப்படியானது.

கிளிநொச்சியிலும் பாதுகாப்பற்ற நிலை தானிருந்தது. ஓர் வீட்டில் அது புகையிரத பொறுப்பாளர் வீட்டில் தங்கியிருந்த போது அங்கு அவர்களின் உறவினரான three star  இல் இருந்த ஒருவர்   வந்திருந்தார். அவரும் பலகேள்விகள் கேட்டு துளைத்தெடுக்கத் தொடங்கியபடியால் வேறிடத்துக்கு மாற வேண்டிய நிலையேற்பட்டது. கிளிநொச்சி வாழ்வு பாதுகாப்பற்றதாக இருந்தது. அப்போது தான் கொழும்புக்குச் செல்வதற்கு  சுதாக்கா பணவுதவி செய்து கொழும்புக்கு சிவகாமி சென்றாள். இந்த நேரம் ரஞ்சித் கனடாவிலிருந்து பண உதவிகள் செய்தார். இவர்களெல்லாம் மறக்க முடியாத மனிதர்கள். அதை விட இவற்றுக்கு எதுவும் செய்து  ஈடும் செய்ய முடியாத கடன்கள்.இவர்கள் எல்லோருக்கும் சிவகாமியின் இதயம் நிறைந்த நன்றிகள். இதுவரைக்கும் இவர்களுக்கு எதுவும் திருப்பிச் செலுத்தப்படவுமில்லை. இதைத்தான் ஞானிகள் சொல்வார்கள் எதுவும் தனித்தில்லை. எல்லாமே ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்கிறது என்று. இது அனுபவ உண்மை.

கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வந்தவுடன் சுபா  STR   கல்பனா போன்றோர்கள்  உதவி செய்தார்கள். நீண்டகால கொழும்பு வாழ்வு சாப்பாட்டுக்கே கஸ்டமாகவிருந்தது. இரவில் படுக்க  இடம் கொடுத்தார்கள் அவர்களை சிவகாமி மேலும் மேலும் கஸ்டப்படுத்தவில்லை. பகலில் ஹிந்துபிட்டி முருகன் கோவில் அன்னை வேளாங்கண்ணி  கோவில் கொச்சிக்கடை அந்தோனியார் கோவில்  இவற்றில்  பசியுடன் காலம் ஓடிக்கொண்டிருந்தது. இவர்களுக்கும் சிவகாமியின் இதயம் நிறைந்த நன்றிகள். இவை பதிவு செய்யப்பட வேண்டியது. அவர்களுக்கும் அவர்களின் உதவிகளுக்கும் சரியான அங்கீகாரம் இப்பதிவில்  வழங்கப்பட வேண்டும். அப்போது தான் இப்பதிவுக்கு ஓர் முழுமை கிடைக்கும். கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வர செல்வநாயம் என்பவர் மிகவும் உதவியாக இருந்து பாதுகாப்பாக இருந்தார். அப்போ எதையும் எதிர்பார்க்காத அந்த உதவி மிகவும் போற்றுதலுக்குரியது.

இவ்வேளை தான் சிவகாமி வேலை தேடத் தொடங்கினாள். அப்போது தான் இலங்கை அரச பொலிஸ் சேவையில் ஆட்களை சேர்த்தார்கள். அவ்வேளை செல்வநாயகம் என்பவரின் சிபாரிசின் பெயரில் அங்கு எழுத்தாளர் வேலை கிடைத்தது. அப்போ சிவகாமியின் வாழ்வில் அன்றாட வாழ்க்கைக்கு  எந்தக் கஸ்டமுமில்லை. பொலிஸ் தலைமைச் செயலகத்தில்  ஆட்சேர்ப்புப் பிரிவில் அந்த வேலை கிடைத்தது. அங்கு சிங்கள  முஸ்லீம் சக உத்தியோகத்தர்களுடன் பணியாற்ற வேண்டிய சந்தர்பமுமேற்பட்டது. ஓர் வித்தியாசமாக அந்தக்காலமிருந்தது. வட-கிழக்கில் ஏதாவது தாக்குதல் ஏற்பட்டு இராணுவத்தினர் இறந்தால் தமிழ் உத்தியோகத்தர்களுக்கு பிரச்சனை தான். இந்தக் காலகட்டத்தில் முஸ்லீம்களுக்கும் புலிகளினால் பிரச்சனை ஏற்படத் தொடங்கி விட்டது. நன்றாக நண்பர்களாகப் பழகிய முஸ்லீம் உறவுகளே இந்தத் தமிழர்களையெல்லாம் போட்டுத் தள்ள வேண்டும் என்று கூறியது வருந்தத்தக்கதாக இருந்தது. ஏனெனில் மனிதர்களுக்கு உணர்ச்சிகள் அப்படி இருந்தது. அவர்கள் இனம் மதம் என்ற வட்டத்துக்குள்ளேயே  சிந்திக்க வைக்கப்பட்டு விட்டார்கள்.   ஏன் தமிழனே அப்படிச்  சிந்தித்துக் கொண்டு மற்ற இன மக்களை அழிக்கும் போது நாம் எப்படி எம்மை அவர்கள் திட்டுவது பிழையென்று வாதிட முடியும். இந்த உணர்ச்சி ஊட்டக்கூடிய பிரித்தாளும் தந்திரமே அரசியல்வாதிகளை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. அதையே புலிகளும் அன்று செய்தார்கள். அதுதான் எல்லோரின் உரிமைகளும் சிறுபான்மையானவர்களாகிய அரசியல்வாதிகளின்  கைகளில் சிக்கியிருக்கிறது. சாதாரண சிங்கள மக்களோ மற்ற மக்களோ யார் யாருக்கு என்ன கொடுமைகளைச் செய்தார்கள். நாம் இன்றும் இனங்களையும் மதங்களையும் சாடிக்கொண்டிருக்கிறோம். இதை உலகின் போக்கைத்  தன் கைக்குள் வைத்திருக்கும்  வல்லரசுகள் நன்றாக பயன்படுத்தி தீ மூட்டிக்கொண்டிருக்கின்றன. அவர்களின் ஆயுத வியாபாரங்களையும் ஏனையவற்றையும் எம்மேல் திணித்து விற்பனையில் கொழுத்து  மேலும் மேலும் உலகை தம்கைக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஓர் பரந்த  உலக அரசியல். இதை நாம் தான் உணர்ந்து இதிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் இதிலிருந்து நாம் இலகுவில் மீண்டு விடுவதென்பதும் இயலாத காரியம். இது பல நூற்றாண்டுகளாக திட்டமிட்டு செய்யும் காரியம். இதை எதிர்த்தவர்கள் விஷமூட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுதான் நிஜம். மற்றவை  உள்நாட்டுக்குள் நடப்பவையெல்லாம் சிறு சிறு தோற்ற வெளிப்பாடுகள்.

கொழும்பு 7 இலிருந்த பொலிஸ் தலைமைச் செயலகத்தில்  ஆட்சேர்ப்புப் பிரிவில்  வேலை பார்த்த போது நிறைய  சிங்கள ஏழைமக்களை சந்திக்க சிவகாமிக்கு சந்தர்ப்பங்களேற்பட்டது.  அவர்கள் பொலிஸில் இணைய வந்ததே தங்கள் ஏழ்மையினால் மட்டுமே. அந்தக் காலத்தில் இப்படி புதிதாகச் சேர்பவர்கள் வடகிழக்குக்கு அனுப்பப்படுவார்கள்.அது போர்முனை என்பதால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை அது. ஆனால் இறந்தால் குடும்பத்துக்கு  உதவிகள் நிறையக் கிடைக்கும் போல. அந்த மக்கள் முதல் நாளே வந்து விடுவார்கள் அனுராதபுரம் அம்பாறை பொலன்னறுவை மகியங்கனை மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து வந்து ஆலமரமொன்று அந்தக் காரியாலயத்துக்குப் பக்கதிலிருந்தது அதில் விடிய விடிய இருப்பார்கள். சிலர் தனித்து வந்திருப்பார்கள். சிலர் பெற்றோரோடு வந்திருப்பார்கள். அவர்கள் மிகவும் கள்ளம்கபடமற்ற அப்பாவிச் சிங்கள மக்கள். அவர்களின் பிள்ளைகள் தான்  சாதாரண சிப்பாய்களாக இராணுவத்திலும்  பொலிஸிலுமிருந்து தங்கள் உயிர்களைப் பறிகொடுத்தவர்கள். ஏன் இது? எல்லாமே வாழ்வாதாரத்துக்காகத் தான். அவர்கள் மாட மாளிகைகளையோ சொகுசு வாழ்வையோ எதிர்பார்த்து அங்கு வந்து காவலிருக்கவில்லை. அவர்களின் கோப்புக்கள் பூர்த்தியாகவில்லை என்றால் அவர்கள் திரும்பவும் வரவேண்டும். அப்படித் திரும்ப வருவதற்கு அவர்களின் பொருளாதாரம் எப்படியிருக்கும் என்பது சிவகாமியால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. பெரும்பான்மை சிங்கள சிவகாமியைப் போன்ற ஊழியர்கள் சரியான விளக்கங்களை அவர்களுக்கு வழங்குவதில்லை. அவர்கள் பாடு மிகவும் திண்டாட்டம். இதனால் தமிழ் முஸ்லீம் தமிழ்  மக்கள் பொலிஸில் இணைபவர்கள் மிகவும் சிவகாமியை விரும்பி தேடுவார்கள். அவர்களின் வேலை மிக மிக விரைவாக  முடித்துக் கொடுக்கக்கூடியவள்  அவள். அவர்களில் எத்தனைபேர் உயிரோடு இருக்கிறார்களோ தெரியாது. ஆனால்  உதவி செய்திருந்தாலும் அவர்களுக்கு மறைமுகமாக துன்பம் செய்திருப்தாக இன்றும் சிவகாமியால் உணரப்படுவதுண்டு. அவர்கள் இறக்காமலிருந்தால் மிகவும் சந்தோசம் தான். அவர்கள் தொழிலோடு இருப்பார்கள். இறந்திருந்தால் சிவகாமி அவர்களுக்குச் செய்தது நன்மையல்ல. இதுதான் போக்கு. இதுதான் வாழ்வின் சுவடுகள். இதில் தவறுகள் நிச்சயமாக ஏற்பட்டிருந்தால் அந்த இறைசக்தி மன்னிக்கட்டும் சிவகாமியை. ஆனால் சிங்கள மக்களின்துயரைப் புரிந்துகொள்ள கிடைத்த சந்தர்ப்பம் அது. அவ்வளவு தான்.

இந்தப் பதிவை முடிக்க வேண்டிய கட்டமும் நெருங்கி விட்ட வேளை சிவகாமிக்கு செல்வநாயகம்  என்பவர் உதவி செய்தார் அவரே இந்த கேடுகெட்ட சமுகத்தின் பார்வையை புறம்தள்ளி சிவகாமியைத் திருமணமும் செய்து கொண்டார். இப்போ சிவகாமி புலம்பெயர் தேசம் ஒன்றில் ………..

புலம்பெயர் தேசத்தில் சிவகாமி  தீபாவைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போ தீபாவினால் கூறப்பட்ட விடயம் என்னவென்றால் தான் தான் சிவகாமியைத் தப்பியோடுவதற்கு உதவிசெய்ததாகவும் அதனால் தனது பதவிகள் பறிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.  பொட்டு அம்மான் தீபாவைச் சந்தேகித்து நிறையத் தொல்லைகளைக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால்  வீடு திறப்புப் போட்டு பூட்டவில்லை.  காரணம் இந்தியப்படை வந்தால் ஓடுவதற்கு ஏதுவாக என்று சிவகாமி நினைத்திருந்தாள் அவள் இருந்த பக்கம் தீபா வரவேயில்லை. குரல் மாத்திரம் தீபாவுடையது சிவகாமி கேட்டாள். ஏனைய போராளிகளும் தீபாக்கா என்ற பெயரை அழைத்துக் கூப்பிட்டதால் தான் தீபா அங்கிருப்பதே சிவகாமிக்குத் தெரியும்.

மேலும் சிவகாமி தனது பால்ய வயது ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதை விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் இனிக்கிடைக்காது. அது எழுத்து வடிவிலிருப்பது மிகவும் நல்லது. முதலாம் வகுப்பாசிரியர் கிறிஸ்டோபர் ஆசிரியை. அன்பே வடிவான இனிய குரலும் உடையவராயிருந்தார். மிகவும் அமைதியானவர். இன்றும் அவரின்  முகம் சிவகாமிக்கு ஞாபகம். அவர் மரணமடைந்தது  சிவகாமிக்கு நல்ல ஞாபகம். எத்தனையோ நல்லவர்கள்  கொல்லப்பட்டு  இந்த சமூகத்துக்கான சேவை தடுக்கப்பட்டது போல் இந்த  கிறிஸ்டோபர் ஆசிரியை அந்த  ஊருக்கு அப்போ நிறைய குழந்தைகளுக்கு அன்பை வழங்கியதாக சிவகாமிக்கு ஞாபகம், அவரின் ஆத்மாவின் சாந்திக்கு  இறை பிரார்த்தனைகள்.

சிவகாமியின் தமிழ் ஆசான் க.சிதம்பரப்பிள்ளை. அவர் ஓர் எளிய மனிதர். சிவகாமியின் ஊரைச் சேர்ந்தவர். தமிழை மிகவும் நேசித்தது மட்டுமல்ல அவர் அவ்வளவு ரசிப்பார். கட்டுரைகள் எல்லாவற்றையும் ஒவ்வொரு வசனமாகப் பார்த்து சிலாகிப்பார். கவிதைகள் என்றாலே  அவரின் கண்களில் தோன்றிய அந்த  பார்வை இன்றும் ஞாபகப்படுத்துகிற ஒன்று. ஓர் மாணவன் அவரின் பெயர் தேவராசா. இவர் TELO விலிருந்தவர். பிறகு என்ன ஆனார் என்பது தெரியாது. படிப்பில்  மிகவும் கெட்டிக்காரன். அவர் சிட்டுக்குருவி பற்றிக் கட்டுரை எழுதியிருந்தார். அதில் என் வீட்டுச்சிட்டு அது தன் வீட்டில் முட்டை பொரித்து  அடைகாத்து குஞ்சு பொரித்தது என்று. அந்த வரியை எனது தமிழ் ஆசான் பலமுறை வாசித்து  மகிழ்ந்தார். அவர் ஓர் சித்தரைப் போன்றவர். இன்றும் உயிரோடிருக்கிறார். அவர் மேலும் மேலும் நீண்டகாலம் வாழவேண்டும்.  அவரின் மாணவி நான் அவரால் தான்  இப்படி எழுதக் கற்றத்தர முடிந்தது. அவருக்கும் எனது நன்றிகள்.

அடுத்தவர் நாகராசா கணிதம் படிப்பித்தவர். அவரைக்கண்டாலே எல்லோருக்கும் பயம். அடிப்பார். ஒருநாளும்  அடி வாங்கியதில்லை. அன்பானவர். யாழ்ப்பாணம் அவர் சொந்த இடம். வறுமையைப் புரிந்து சோர்ந்திருந்தால் சாப்பிடவில்லையா என்று அன்போடு அரவணைத்தவர். அவரின் பாடம் ஒழுங்காகச் செய்த படியால் விரும்பி ஆதரவு தந்தார்.  எங்கிருந்தாலும் நீடூழி  வாழ சிவகாமியின் பிரார்த்தனைகள்.

மேலுமொருவர் 6ம் வகுப்பில் விவசாயம் படிப்பித்த மகேந்திரன் ஆசிரியர். மிகவும் அன்பானவர். படிப்பு மட்டும்சொல்லித் தராமல் எம்மையெல்லாம் ஊக்குவித்து மேலும் முன்னேற வழிகாட்டியவர். எங்கிருந்தாலும் அவருக்கும் நன்றிகள்.

திருமதி மகாலிங்கம். சிவகாமியின் பாடசாலையின் அதிபரின் மனைவி. அவரும் நிறைய நல்ல விடயங்களையும் வாழ்வைப் பற்றியும் போதித்த அற்புதமானவர். அவர்களுக்கும் எனது நன்றிகள். இவர்களையெல்லாம் சந்திக்க முடியுமோ தெரியாது. அவர்கள் இருக்கிறார்களா என்பதும் தெரியாது. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் எனது நன்றிகள். விஞ்ஞானம் சொல்கிறது இந்தப் பிரபஞ்சத்தில் எல்லா விடயங்களும் பதிவு செய்யப்படுவதாக. அதையே ஞானிகளும் கூறுகிறார்கள். இவையெல்லாம் உண்மையாக இருக்குமானால் அந்தந்த நல்லுள்ளங்களுக்கு இச்செய்திகள் சென்றடையட்டும்.

என்னைப் பெற்றெடுத்து துன்பங்களையே சுமந்து சென்ற என் பெற்றோருக்கும் என்னை விட்டு இவ்வுலகை விட்டுச்சென்ற என் சகோதரங்களுக்கும் என் இனிய தோழிகள் சோதியா சுபாங்கி மனோ மாஸ்டர் அமலன் தயா சுகந்தன் வவியக்கா போன்ற நல்ஆன்மாக்களுக்கும்   இது சமர்ப்பணமாகட்டும். இதில் எனது பெயரைத்தவிர எந்த மிகைப்படுத்திய செய்திகளுமில்லை. இது எனது ஆன்மாவின் அனுபவம். அவ்வளவு தான். இதை பெயருக்காகவோ விளம்பரத்துக்காகவோ எழுதவில்லை. இதை எழுதும்படி தூண்டிய எனது தோழர் ரஞ்சித்துக்கு எனது இதயத்தின்  நன்றிகள்.

இந்த இரண்டாவது பாகம் மிகவும் எழுதவே கஸ்டமாக இருக்கிறது. ஏனெனில் இதை நடக்கும் போது எதிர்கொண்ட விதம் அப்படி வேதனையும் துன்பங்களும் நிறைந்தது. புலம்பெயர் தேசத்துக்கு வந்தே கனவுகளில் அடிக்கடி வந்து பயமுறுத்திய  தப்பியோடல் அது. அடிக்கடி கனவு புலிகள் பிடித்து சித்திரவதை செய்வது போலவே இருக்கும் சிவகாமிக்கு. ஆழ்மனத்தில் பதிந்த செயலிது. இதுவும் நடந்தது இப்படியும் நடந்தது விடுதலைப்போரில் என்பது தான் வேதனை தரும் விடயம், மீண்டும் என் அரசியல் ஆசான் மனோ மாஸ்டருக்கும் EPRLF  சுந்தர் என்ற அமலனுக்கும் இதை அன்புடன் சமர்ப்பிக்கின்றேன். இவ்வுயிர்கள் இந்த சமூகத்துக்கு இனிமேல் உதவப்போவதில்லை. ஆனால் அவர்களின் நற்சிந்தனைகள் எல்லாம் பரவ வேண்டும். இந்தப் போராட்டத்தில் புதைந்து போன அனைத்துப் போராளிகளுக்கும்  பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரனுக்கும் போரில் மாண்டு போன எல்லா உயிர்களுக்கும் எனது தங்கையின் மகள் சர்மியாவுக்கும் இது சமர்ப்பணம். இது உயிர்களுக்குக் கொடுக்கும் மரியாதையும் மதிப்பும் தான். இந்தப்போரில் மாண்டுபோன இராணுவத்துக்கும் சிங்கள முஸ்லீம் தமிழ் மக்களுக்கும்  எல்லா உலக நாடுகளிலும் இறந்து கொண்டிருக்கிற, இறந்துபோன அனைத்து மக்களுக்கும்  இது சமர்ப்பணம். இது சிவகாமி தன்னுயிரை எப்படி நேசிக்கிறாளோ அதேபோல் எல்லாவுயிர்களையும்  நேசிக்கிறாள். இதற்கு இனம் மதம் மொழி நிறம் சாதி அரசியல் என்ற எந்தச்சாயமோ இல்லை. உலக வல்லரசுகளும் உலகை ஆட்டி வைத்துக்கொண்டு தம் சுயநலத்துக்காக போர்களை மூட்டிக்கொண்டிருக்கும் அந்த தலைவர்களுக்கும்  ஓர் அன்பான வேண்டுகோள், ஒவ்வொரு உயிரும் தன்  சுதந்திரத்தையும் உரிமையையும்  பெற உரிமையுடையவர்கள். இந்த உலகத் தலைவர்கள் மனங்களில் நல்லெண்ணங்கள் தோன்றி இந்தப்பூமி ஓர் அமைதிப்பூங்காவாக திகழ வேண்டும். இது ஒவ்வொரு உயிருக்குமான அங்கீகாரம்.  இந்த சிவகாமி எந்த குறுகிய வட்டத்துக்குள்ளும் அடங்காத சீவன். இது எங்கெல்லாம் துன்பங்களும் அநீதிகளும் நடக்கின்றனவோ அங்கெல்லாம் தன்  மனித நேயத்தை தயங்காமல் தெரிவிப்பாள். இதுவே உயிர்களை நேசித்த அந்த ஆசான் மனோ மாஸ்டருக்கு அவள் கொடுக்கும் அங்கீகாரம்.

நன்றிகள் இதயசுத்தியோடு, உங்கள் அன்பு சிவகாமி.

முற்றும்.