இலங்கை: கொரனா செய்திகள்

யாழ். மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கிராம அலுவலக பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று கொவிட் தடுப்பூசிகளை கட்டாயம் போட்டு கொள்ளுங்கள்” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களுக்கான கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அந்த வகையில், யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபம், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்துக்கும் கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை – கரவெட்டி ஆகிய பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் ஆகியவற்றுக்கு, விஜயத்தை மேற்கொண்டு, தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடினார்

தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின்னர், சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதன் காரணமாக, முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்தத் தடுப்பூசிகளைப் மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்

அத்துடன், இந்த முதல்கட்ட தடுப்பூசியை விரைவாக வழங்காத விடத்து, அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியைப்  பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே, உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரித்து, மிகக் குறைந்த நாள்களில் இந்த 50,000 தடுப்பூசியையும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பொலிஸ், இராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து, விரைவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கையானது, இன்று யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களின் அவதானமிக்க வைத்திய பிரிவுகளை அடிப்படையாக வைத்து, சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் குண்டசாலை- பண்டாரநாயக்க தேசிய பாடசாலை மற்றும் மெனிக்கின்ன- பிலவல மஹா வித்தியாலயத்திலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டி ஜனாதிபதி வித்தியாலயம், கும்புகொடஆர- ரத்தனாகம விகாரையிலும் இடம்பெறுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதேப்போல் யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 மத்தியநிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.