கேரளாவில் கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ஹைடெக் மருத்துவமனை

(கா.சு.வேலாயுதன்)

தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களை அரசில்வாதிகள் சம்மணம்போட்டு அமர்ந்து சம்பாதிக்கும் மையங்களாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், பக்கத்து மாநிலமான கேரளத்தில் கூட்டுறவு சங்கத்தின் மூலம், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனையை செம்மையாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

‘இ.எம்.எஸ் நினைவு கோ-ஆபரேட்டிவ் மருத்துவமனை மற்றும் ரிசர்ச் சென்டர்’ – இதுதான் அந்த ஹைடெக் மருத்துவமனை. பாலக்காடு – கோழிக்கோடு சாலையில் பெருந்தலமன்னா என்ற இடத்தில் இருக்கிறது இந்த மருத்துவமனை. இதன் முகப்பிலேயே மருத்துவமனையை பார்த்தபடி மார்பளவு சிலையாய் இருக்கிறார் இ.எம்.எஸ். உள்ளே நுழைந்தால் தனியார் மருத்துவமனைக்கு நிகரான பிரமிப்பைக் காட்டுகிறது மருத்துவமனை.

இ.எம்.எஸ் நினைவாக..

இதன் அருகில்தான் இருக்கிறது ஏலங்குளம். அங்கு மனக்கல் என்ற இடத்தில்தான் முதுபெரும் கம்யூ னிஸ்ட் தலைவரும் கேரளத்தின் முன்னாள் முதல்வருமான இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பிறந்தார். ஏலங்குளம், மனக்கல் சங்கரன் நம்பூதிரிபாட் (இ.எம்.எஸ்) என்பதே அவரது முழுப்பெயர். 1998-ல், அவர் இறந்த சமயத்தில் அவரது நினைவாக ஏழைகளுக்கு உதவ இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. கூட்டுறவு சங்கத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை முதலில் 50 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 536 படுக்கைகள் கொண்ட ஆறு மாடி கட்டிடமாக வளர்ந்து நிற்கிறது.

ஒரு கூட்டுறவு சங்கத்தால் இது எப்படி சாத்தியமானது? மருத்துவமனையின் பொதுமேலாளர் எம். அப்துன் நசீரைச் சந்தித்து நமது கேள்வியை முன் வைத்தோம். அவர் பேசினார். “இந்தியாவில் கூட்டுறவு சங்கம் மூலமாக செயல்படும் மருத்துவமனைகளில் என்.ஏ.பி.ஹெச் (National Accreditation Board for Hospitals) அங்கீகாரம் பெற்ற ஒரே மருத்துவமனை இது மட்டும்தான். மற்ற மருத்துவமனைகள் மாதிரி இங்கே நோயாளிகளிடம் சுரண்ட மாட்டார்கள். உழைப்பாளி வர்க்கத்துக்கு உயர்தர சேவை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தொடங்கப்பட்டது இம்மருத்துவமனை.

27 ஆயிரம் பங்குதாரர்கள்

பொதுமக்களின் பங்களிப்பான 1.5 கோடி ரூபாயை வைத்து வாடகைக் கட்டிடத்தில் தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை இப்போது சொந்தக் கட்டிடத்தில் இயங்குகிறது. இப்போது இதன் பங்கு மதிப்பு 60 கோடி. 27 ஆயிரம் பங்குதாரர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள் என இதனால் லட்சம் பேருக்கு மேல் பயனடைகிறார்கள். பங்குதாரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இங்கே பத்து சதவீதம் கட்டணச் சலுகை தரப்படுகிறது. இங்கு தினமும் 2,000 பேர் வரை வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தும், தமிழகத்தின் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்து மக்களும் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள்” என்ற அவரிடம், “இ.எம்.எஸ் பெயரில் மருத்துவமனை இருப்பதால் இங்கே இடதுசாரிகளின் கை ஓங்கியிருக்குமோ?” என்று கேட்டோம்.

அதற்கு அவர், “அப்படியெல்லாம் இல்லை. சாதி, மதம், இனம் கடந்து வெளிமாநில மக்களும் இதன் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இங்கு மருத்துவ அதிகாரியாக இருந்த ஏ.முகம்மதுதான் இப்போது மருத்துவமனையின் தலைவராக இருக்கிறார். இதன் 13 இயக்குநர்களில் தற்போதைய கேரள சபாநாயகரான ஸ்ரீராமகிருஷ்ணனும் ஒருவர். எவ்வித அரசியல் மனமாச்சரியங்களுக்கும் இடமளிக்காமல் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மருத்துவமனை இது” என்றார்.

இந்த மருத்துவமனையில் அனைத்துவிதமான நோய்களுக்கும் உயர்தர நவீன சிகிச்சைகள் அளிக் கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சைக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 150 ரூபாயும், நடுத்தர மக்களுக்கு 250 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளிப்பதால் ஏற்படும் இழப்பை மருத்துவனையின் அறக்கட்டளை நிதியி லிருந்தும் பொதுமக்களிடம் திரட்டப்படும் நன்கொடைகள் மூலமாகவும் ஈடுகட்டிக் கொள்கிறார்கள்.

கேரள அரசின் அங்கீகாரம்பெற்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்திலும் தங்களை இணைத்துக் கொள்ளும்படி இம்மருத்துவமனை 2 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், நம்மவர்கள் இதுவரைக்கும் மூச்சே விடவில்லையாம்.

விளம்பரம் செய்வதில்லை

இதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் நீலகிரி மாவட்டத்தின் பெரும்பகுதி மக்களுக்கு அது பிரயோஜனமாக இருக்கும் என்கிறார்கள் இங்குள்ள மருத்துவர்கள். இந்த மருத்துவமனையில் நர்சிங் கல்லூரியும் செயல்படுகிறது. எந்தவிதமான உள்குத்தும் இல்லாமல் முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் மட்டுமே இங்கே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

மருத்துவமனையிலும் அதற்கான கூட்டுறவு சங்கத்திலும் பணிபுரியும் பணியாளர்கள் ஒருவர்கூட இதன் பங்குதாரர் இல்லை. கேரள அரசின் கூட்டுறவு சங்க சட்டம் இதை அனுமதிப்பதில்லை. “அது சரி, இத்தனை சிறப்புகள் இருந்தும் இங்குள்ள மக்கள் ஏன் பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் என தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு ஓடுகிறார்கள்?” என்று கேட்டபோது,

“காசைக் கொட்டிக் குடுத்துப் பார்த்தால்தான் தரமான சிகிச்சையா இருக்கும்னு மக்கள் நினைக்கிறாங்க. அத்துடன், இப்படியெல்லாம் சிகிச்சையளிக்கிறோம்னு விளம்பரம் செய்வதில்லை என்பதை எங்களதுமருத்துவமனை நிர்வாகம் ஒரு கொள்கையாகவே வெச்சிருக்கு. அந்த வகையில, எங்களை நாங்களே விளம்பரப்படுத்திக்காததும் அதுக்கு ஒரு காரணமா இருக்கலாம்” என்கிறார்கள் இங்குள்ள மருத்துவப் பணியாளர்கள்.