தோழர் முகுந்தன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) வைக்கப்பட்டிருந்த குழிக்குள் புலி உறுப்பினர் ஒன்று ஓர் பாம்பை உள்ளே போட்டது. ஆனால் முகுந்தன் அதைக் கண்டு பயந்து அலறியதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. எந்த வகைப்பாம்பைப் போட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.
இரண்டு நாட்கள் கழித்து இன்னுமோர் பாம்பைக் கொண்டு வந்து புளொட் அங்கத்தினர்கள் இருந்த குழிக்குள் போட்டனர். அந்தக் குழியிலிருந்து சிறிதளவு சலசலப்புக் கேட்டது. அந்தக் குழியில் மொத்தம் பத்துப் பேர் வரையில் இருந்தனர். பாம்பைக் குழியில் போடுட அவர்கள் படும் அவஸ்தையைக் கண்டு புலிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
பாம்பு போடப்பட்ட மறுநாள் காலையில் முகுந்தன் அவர்கள் காலைக் கடனுக்காக ஏணிவழியாக வெளியே வந்தார். நான் அவரது முகத்தை உற்றுக் கவனித்தேன். அவரது முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை.
அவர் வெளியே வரும்போது போடப்பட்ட பாம்பு உள்ளேதான் இருந்தது. இந்தப் புலிகளை விட பாம்பு ஒன்றும் கொடிய விலங்கு இல்லை என்று அவர் மனதுக்குள் நினைத்திருந்தார் போலும். இவர்களிடம் பட்டு வரும் சித்திரவதையை விட பாம்பு கடித்து இறப்பது சுலபமான இறப்பாக இருக்கும் என்றும் அவர் தனக்குள் நினைத்திருப்பார் போலும்.
ஏனெனில் அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியவில்லை! அங்கு இருந்த மூவாயிரம் பேரில் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் இவராகத்தான் இருப்பார்.
நல்லவேளையாக இந்தப் பாம்பு விளையாட்டை நாங்கள் இருந்த பகுதியில் இருந்தவர்கள் விளையாடவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பணக்காரர்களுக்கு இந்தப் பாம்பு வைத்தியம் கொடுத்துதான் பணம் பறித்தனர் இந்தப் புலிகள்.
கனடாவில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் தனது நெருங்கிய உறவினரது திருமணத்திற்காக மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்தார். இவர் புலிகள் இயக்கத்துக்கு பணம் உட்பட பல வழிகளில் உதவிகள் புரிந்தவர். அமைதி நாட்களில் ஆசை பிறந்தது யாழ்ப்பாணத்தைப் பார்க்க. இவர் ஓர் வியாபாரி!
புலிகள் வழக்கமாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடம் பணம் பறிப்பது வழக்கம். இதனை முன்னரே தெரிந்துகொண்ட வல்வெட்டித்துறை நபர் தனது குழந்தைகளிடம் திட்டவட்டமான ஓர் உத்தரவினைப் போட்டுவிட்டுத்தான் இலங்கை வந்தார். “புலிகள் எங்களைப் பிடித்துவைத்துக் கெண்டு பணம் கேட்டாலும் நீங்கள் ஒரு டொலர்கூட அவர்களுக்குக் கொடுத்துவிடக் கூடாது. நானும் அம்மாவும் எப்படியும் கதைத்து அவர்களிடமிருந்து தப்பிவந்து விடுவோம்! என்று
கனடாவில் படித்துக்கொண்டிருக்கும் தனது குழந்தைகளிடத்துக் கூறிவிட்டு புறப்பட்டனர் இலங்கைக்கு!
வன்னியைக் கடந்து வல்வெட்டித்துறை சென்று திருமணத்திலும் கலந்து கொண்டார். திருமண வீட்டிலேயே தொடர்பு கொண்டனர் புலிகள். பணம் கேட்டனர்!
உசாராக இருந்த வியாபாரி நபர் கனடாவில் மிகுந்த சிரமத்தில் வாழ்வதாக விளக்கங்கள் பல கொடுத்து புலிகளை நம்பவைத்து திருப்பி அனுப்பிவிட்டார்.
விடுமுறை முடிந்து கனடா திரும்புவதற்காக கொழும்பு நோக்கிப் புறப்பட்டார் வல்வெட்டித்துறை நபர். கிளிநொச்சியில் வைத்து வாகனத்திலிருந்து இறக்கப்பட்டனர், வல்வெட்டித்துறை நபரும் அவரது மனைவியும். ஓர் சிறிய விசாரணை உண்டு வாருங்கள் என்று இறக்கி அழைத்துச் சென்றனர் புலிகள்.
எப்படியாவது குறைந்தது பத்துலட்சத்தையாவது கறந்துவிடலாம் என்று புலிகளின் நிதி பறிப்பாளர் முற்பட்டார். வல்வெட்டித்துறை நபரோ தனது வாய்த் திறமையால் புலிகளிடமிருந்து நிதி பெறும் அளவுக்கு கதைகள் சொல்லி அவர்களை மனமிரங்க வைத்துக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் முழுவதும் கழிந்து விட்டது. மறுநாள் பிற்பகல்வரை தொடர்ந்து பணப்பறிப்பு உரையாடல்.
இறுதியாகச் சில புலிகள் வந்தனர். இவரையும் இவரது மனைவியையும் அருகில் வெட்டிவைக்கப்பட்டிருந்த குழி ஒன்றின் அருகில் அழைத்துச் சென்றனர். அக்குழி 10 – 8 அகல நீளம் கொண்டதும் 10 அடி ஆழம் கொண்டதுமாக இருந்தது. ஏணி ஒன்றை இறக்கி வல்வெட்டித்துறை நபரை உள்ளே இறங்கும்படி உத்தரவிட்டனர். மனைவியை வெளியே நிற்கும்படி கூறினர்.
சிறிது நேரத்தில் ஐந்து ஆறு அடி நீளம் உள்ள பாம்பு ஒன்றைக் கொண்டு வந்து வல்வெட்டித்துறை நபர் இருந்த குழியினுள் போட்டனர். இதைப்பார்த்த அவரது மனைவி மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
வல்வெட்டித்துறை நபர் எழுப்பிய அலறல் சத்தத்தில் பாம்பு மிரண்டு குழியிலிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்தது. வல்வெட்டித்துறை நபர் கத்தினார், நீஙகள் கேட்கும் காசைத் தருகிறேன் என்னைக் காப்பாற்றுங்கள், என் மனைவியைக் காப்பாற்றுங்கள் என்று.
ஏணியை வைத்தனர் உள்ளே. மனைவி மயக்கம் தெளிந்து, தனது செல்போனில் கனடாவுக்கு தனது குழந்தைகளிடத்துத் தொடர்பு கொண்டார்.
புலிகள் இதனைப் பயன்படுத்தி 50 லட்சம் ருபா வேண்டும் என்றனர். அவர்களும் சம்மதித்து தங்கள் பிள்ளைகளிடம் கேட்டனர். நாங்கள் ஓர் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளோம், எப்படியாவது நாங்கள் சொல்லும் நபரிடம் 50,000 டொலரைக் கொடுங்கள் என்று கேட்டனர். குழந்தைகளோ முடியாது. எங்களிடம் காசு இல்லை என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டனர்.
(புலி வதை தொடரும்…)