அம்பாறை உடும்பன்குள படுகொலை

19.2.1986 அன்று அம்பாறை உடும்பன்குளத்தில் இனவெறியர்களால் பெண்கள் குழந்தைகள் என 130 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 31ம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். ஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர் . இந்தவகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்க மாகாணம் கண்டிருக்கிறது. இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமமாகும்.

இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களும் சிங்கள இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்பமுடியவில்லை சிறிலங்கா இராணுவத்தினராலும், ஊர்காவல் படையினராலும் 130க்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1986ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 19ம் திகதி அம்பாறை மாவட்டம் உடம்பன்குளத்திலுள்ள மலையடிவார வயல்களில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் சென்ற இராணுவத்தினரும், ஊர்காவல்படையினரும் சுற்றிவழைத்து கைது செய்து ஆண் பெண் குழந்தைகள் என்ற பேதமின்றி கூட்டுப்படுகொலை செய்தனர்

இங்கு பிடிக்கப்பட்ட ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொடூரமாக சித்தரவதை செய்து படுகொலை செய்தனர். பெண்களை கூட்டாக பாலுறவுக்குட்படுத்தி படுகொலை செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த பலர் உயிருடன் தீவைத்து எரிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் 21.02.1986 அன்று வணபிதா சந்திரா பெர்ணான்டோவின், தலைமையில் அங்கு சென்ற குழுவினர் அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள். இந்த சம்பவத்தில் 130க்கும் அதிகமானோர் படுகொலை செய்ப்பட்டிருந்தனர்

இந்த இனப்படுகொலைத் தாக்குதலுக்கு சிறீலங்கா இராணுவத்தின் லெப்டினன்ட் சந்திரபால என்பவர் தலைமை தாங்கியதாகவும் ,ஊர்காவல் படையை சேர்ந்த 12 பேர் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்றுவரை அவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.