உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும் (பாகம்-1)

இலங்கைப் பாராளமன்ற அரசியல்வாதிகள் எல்லாருமே அப்படித்தான். அதில் பிள்ளையான் உச்சத்தில் உள்ளவர். பிள்ளையானைப் பற்றி மஹிந்தா ராஜபக்ஸ்ச இப்படி மூச்சுக்கு முன்னூறு தடவை கூறியிருக்கிறார். „

“நான் குழந்தைப் போராளியை முதன் மந்திரி ஆக்கினேன்”.

ஏன் பிள்ளையானை முதன் மந்திரியாக்கினார், அதற்குப் பிரதிஉபகாரமாகப் பிள்ளையான் என்ன செய்தார் என்பதை உதிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்பு தெளிவாகச் சொல்லும்.-

என் பெயர் மௌலானா. அசாத் மௌலான.

அசாத் மலாவுத்- இலங்கை குடிமகன். இலங்கை வாழ் முகவரி: மூர் றோட்-14 டெகிவளை

கொழும்பு

பிறந்த தேதி 1.1.63

கல்வி:-விவசாய இளங்கலை

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி.

தொழில்:- 1.செயலாளர். 2.வணிகர்

சொந்தமாக சைக்கிள் அசெம்பிளிங்.

தண்ணீர் மொத்த விற்பனை விநியோகஸ்தர்.

சராசரி மாத வருமானம் ரூபா 300000,

திருமணமாவர்

மனைவி:- பாத்திமா மௌலானா

பிள்ளைகள்

முபாறக்;

ஆயிசா

பாடசாலை செல்பவர்கள்.

உலக பொருளாதாரமும் உலகச் சந்தையும் உலக அரசியலும் கோலோச்சும் எமது சகாப்தத்தில் எந்த மனிதனும் தான் கனவு கண்டதுபோல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது. அதுவும் நாம்வாழும் சகாப்தம் உலகரீதியில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் சகாப்தம்.

பெருக்கெடுக்கும் ஆற்றில் விழ்ந்த படகுபோல அந்த நீரோட்டத்தில் அள்ளுப்பட்டு அடிக்கடி ஏற்படும் எதிர்பாராத விபத்துகளால் மனிதர்களது வாழ்க்கை ஓட்டம் அடிக்கடி திசைமாறிச் செல்லும்.

ஒவ்வொரு திடீர், கொந்தளிப்புச் சூழலுக்கும் ஒத்துப்போக முடியாத மக்கள் அழிந்து போனார்கள். தப்பிப் பிழைப்பதற்கு ஒரு சின்ன அதிர்ஷ்டம் எப்பொழுதும் தேவைப்படுகிறது.

நான் வளர்ந்து வாலிபப் பராயத்தை அடைந்து நனவான மனிதனாக வாழ்ந்த காலம் முழுவதும் இலங்கை எப்போதும் ஒரு சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை அனுபவித்தே வந்தது.

இலங்கை வரலாறு என்பது இனக் கலவரங்களின் வரலாறு. இலங்கை வரலாறு என்பது அரசியற் கொலைகளின் வரலாறு. பிரதமர் பண்டாரநாயக்கா கொலை தொடக்கம் உதிர்த்த ஞாயிறு கொலை வரை அப்படித்தான் நீள்கிறது.

பண்டாரநாயக்கா கொலையில் எவ்வாறு புத்த பிக்குகள் விலைப் பட்டார்களோ அப்படியே அதே பாணியிலேயே பிள்ளையானும் விரும்பி விலைபோனவர். இது ஒன்றும் தற்செயல் அல்ல.

பிள்ளையானது வாழ்வு, மெய்பொருள் நாயனாரைத் தேவாரப் புத்தகத்துள் கத்தியை ஒளித்து வைத்து சிவனடியார் வேடம்பூண்டு கொன்ற முத்தநானது கதைபோன்றது.

ஏறத்தாள எல்லாக் காலங்களும் ஓர் உள்நாட்டு யுத்தகாலமாகவே எனது வாலிபம் முழுவதும் கடந்து சென்றது.

எனது தந்தையார் மொகமட் அலியாஸ் மொகமட் மிகிலார் 1971 இளைஞர் எழுச்சியில் றோகண விஜயவீராவின் இயக்கத்தில் அங்கத்தவராக இருந்தவர்.

1985 ஈ.பி.ஆர்.எல்.எப் போராட்ட இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். 1987 முதலாவது வடகிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர். வடகிழக்கு மாகாண முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் கீழ் மாகாண அரசாங்கத்தின் ஒரு அதிகாரியாகத் திருகோணமலையில் பணியாற்றினார். அத்துடன் ஈ.பி.ஆர்.எல்.எப் பின் மத்திய குழு அங்கத்வராக இருந்தார்.

திருகோணமலை 1990 ஐ.பி.கே.எஃப் காலகட்டத்தில் மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் அவர் பத்மநாபா உள்ளிட்ட ஈ.பிஆர்.எல்.எப் முக்கியஸ்தர்களுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எப்-ன் தலைவராக இருந்த பத்மநாபா 1990 ஜூன் 19 அன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அவரது கட்சிக்காரர்கள் 12 பேர்களோடு சேர்த்துத் தமிழீழவீடுதலைப் புலிகள் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுள் எனது தந்தையும் ஒருவர்.

இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் இலங்கைக்கு வெளியில் நடந்த நிகழ்வாக அமைந்தது. அப்பொழுது எனக்கு வயது 7. எனக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரரும் இருக்கின்றனர். நான் பிறந்த ஊர் மருதமுனை.

நான் ஆரம்பம் முதல் உயர்தராதரம் வரை கல்வி கற்றது மருதமுனை சாம்ஸ் மத்திய கல்லூரி. எனது பல்கலைக் கழகப் புகுமுகச் சித்தி 2003. பேராதனைப் பல்கலைக் கழகப் புகுமுகம் 2003-2004.

பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கையில் தினமுரசு பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் சம்பாதித்து எனது கல்வியைத் தொடர்ந்தேன். அதிகமாக அந்நாளைய அரசியல் நிலவரங்களின் ஆய்வை எழுதுவேன். அந்த வருமானம் என் கல்விக்கான செலவை ஓரளவுக்கு ஈடுசெய்தது.

பல்கலைக் கழகத்தில் விரிவுரைகள் அப்பொழுது நான்கு நாட்கள்தான் இருந்தன. வார இறுதியில் தலைநகரான கொழும்புக்கு வந்து தினமுரச பத்திரிகைக் காரியாலயத்தில் எனது கட்டுரைகளைத் தட்டச்சு செய்து சரி பார்த்து மற்றய உதவிகளும் செய்து வந்தேன்.

எங்கள் தேசம் என்ற பத்திரிகைக்கும் அரசியல் கட்டுரைகளும் விமர்சனங்களும் எழுதிப் பணத்தேவையைச் சமாளித்தேன். குடும்பத்தலைவன் இல்லாததால் ஏற்பட்ட சுமை அது.

அப்பொழுது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறு கைத்தொழில் மற்றும் வடமாகாணப் புனருத்தாரண அமைச்சராக, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிர்வாகத்தில் இருந்தார். 2006 இல் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்குச் செயலாளாராகப் பணிபுரியும் ஒரு வேலை வளங்கி உதவி செய்தார்.

2004 கிழக்கு மாகாண விடுதலைப்புலிகள் இயக்கம் பிளவு கண்டு கருணா ஒரு புதிய ஜனநாயகக் கட்சியைத் தோற்றுவித்திருந்தார். வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக கருணாவின் அரசியல் கட்சியை சட்டபூர்வமாக இயங்குவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரத்துங்கா அனுமதிக்கவில்லை.

ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சி முழுவதும் கருணா நேபாளத்திலும் இந்தியாவிலும் தலைமறைவாகவே வாழ்ந்தார். இது ஒன்றே போதும் புலிப் பிளவை யார் செய்தார்கள் என்பதை ஊகிக்க.

மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகத் தனது முதல் ஆறு வருட காலப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 2006, ஏப்பிரலில் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா என்னைத் தனது உத்தியோக வாசஸ்தலத்துக்கு வரும்படி அழைத்திருந்தார். அது கொழும்பு லியாஸ் றோட்டில் அமைந்திருந்தது.

2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருணாவின் அரசியல் கட்சியைச் சட்டரீதியாக செயற்பட அனுமதித்தார். திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சொன்னார்கள் „கருணா அம்மானை உனக்குத்தெரியுந் தானே. அவர்கள் ஓர் அரசியற்கட்சியாகச் செயற்பட முயற்சிக்கிறார்கள்.

இப்பொழுது அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு ஜனநாயக அரசியல் அறிவோ அனுபவமோ போதிய அளவு கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்கள் சூழ்நிலையின் கைதிகள். அவர்களுக்கு உதவி செய்பவனாகப் பணியாற்றும் பொறுப்பை நீ எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் அதற்கு இசைந்தேன்.

நான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கதைத்துக் கொண்டிருந்த பொழுது கருணா, பிள்ளையான், குகனேசன் ஆகிய மூவரும் அங்கு வந்தனர். அவர்களை அமரச் சொல்லிவிட்டு பின்னர் என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். நீ இவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நானும் தலையசைத்தேன்.

நான் கருணாவிடம் பணியாற்றச் சென்ற பொழுது கருணாவுக்கு எனது பத்திரிகைச் செயற்பாடுகள் தெரிந்திருந்தன. அவரது முதல்வேண்டுகோள் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகள் கீழ்மாகாணத்தில் நடாத்திய தமிழ் அலைப் பத்திரிகையை மீண்டும் கொணர உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

நான் தமிழ் அலை ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அதனோடு கூடவே பல மற்றய பொறுப்புக்களும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. இது ஒரு தொழில் மாத்திரமல்ல ஒரு விசுவாசமான இலங்கைப் பிரஜை என்ற முறையில் ஒரு ஆயுதக் குழுவை ஜனநாயகமயப்படுத்தவேண்டிய கடமைப்பாடும் எனக்கு இருந்தது.

நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முனையாத எவரும் நாகரீகமான மனிதனாகவோ ஜனநாயக அரசியல்வாதியதகவோ இருக்க மாட்டான். யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது. அந்த ஆட்சி ஒடுங்காது செழிக்கும். தேசம் வேரோடு சாயாது.’ இதுதான் நாம் கற்ற பயனுள்ள கல்வி.

வெளி ஊடகங்களை இங்கிதமாகவும் சாணக்கியமாகவும் கையாளும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. கருணா குழுவிலிருந்த எல்லோரும் அன்றய திடீர் அரசியல் சூறாவளியின் நிர்ப்பந்தத்தால் ஏறத்தாள கல்வியை இடைநடுவே விட நிர்ப்பந்திக்கப்பட்ட இரக்கத்துக்கு உரியவர்கள். ஆதலால் தமிழ் சிங்கள ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யும் பணியும் எனக்குத் தரப்பட்டது.

அத்துடன் வெளிநாட்டுத் தூதரகங்களைத் தொடர்பு கொள்வதற்கும், இராஜதந்திர ரீதியில் உணர்திறன் கொண்ட, இங்கிதம் தெரிந்த, கடுமுடுக்கில்லாத வளைந்து கொடுக்கக் கூடிய, கலாச்சார ரீதியாக மெருகூட்டப்பட்ட நன்கு சமகால விடயங்கள் அறிந்த அறிவுள்ள நபர் ஆகவும் நான் அவர்களால் இனங்காணப் பட்டேன்.

பாதுகாப்புக்காக கொழும்பு பொரளை இராணுவ முகாமுக்கு அருகாமையில் பத்திரிகை வேலைக்கும் அரசியல்வேலைக்கும் ஒரு கட்டிடம் தரப்பட்டது.

பின் அங்கிருந்து கொழும்பு நாரகன் பிட்டி பகுதியில் இராணுவ பாதுகாப்புடன் பத்திரிகை மற்றும் அரசியல்வேலை செய்வதற்காக ஒரு கட்டிடம் தரப்பட்டது.

அங்கே கருணா பிள்ளையானோடு நானும் ஏறத்தாள முழு நேரமும் வேலை செய்தோம். பயங்கரவாதிகளாக சைனைட் குப்பிகளோடு தற்கொலைக் குண்டுக் கவசத்தைப் போட்டுக் கொண்டு திரிந்தவர்கள் ஜனநாயக வாழ்கைக்கு வந்தது சநதோஷமாகவும் அவர்களை நாகரீக மனிதர்கள் ஆக்கும் பணியில் பங்களிப்பது எனக்;கும் கடைமைப்பாடாகவும் இருந்தது.

கருணா எனக்கு உடனேயே ஒரு கைத்தொலைபேசியும் தொடர்புகொள்ள வேண்டடிய தொலை பேசி எண்களையும் தந்தார். சிறிது சந்தேகங்களும் பயமும் இருந்த போதும் அவர்களோடு நிதானமாகவும் கவனமாகவும் அகலாமல் அணுகாமல் தீக்காய்வதுபோல் வேலைசெய்யத் தொடங்கினேன்.

உயர் பொறுப்புகளில் இருப்பவர்களோடு அருகில் இருப்பது ஆபத்தானது என்ற உள்ளுணர்வு என் மனதுள் எப்பொழுதுமே இருந்துகொண்டுதான் இருந்தது. எந்த மனிதனும் மாற்றத்துக்கு உட்படாமல் இருக்க முடியாது என்பதை மனிதவாழ்வியல் நிறுவியுள்ளது.

தமிழ் அலை மாதத்துக்கு இரண்டு பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது.

என்னுடைய வதிவிடம் பாணந்துறையில். பத்திரிகைக் காரியாலயம் பொரளை விமானத்தளத்தக்கு அருகாமையில். பிள்ளையான் சொன்னார் நெடுகப் பயணம்செய்வது பாதுகாப்பற்றது. இங்கேயே இரு என்று சொன்னார். இப்பொழுது படிப்பை இடைநிறுத்த யோசித்தேன்.

பத்திரிகைக் காரியாலயம் பொரளையிலிருந்து நாரகன்பிட்டி இராணுவ முகாமுக்குப் பக்கத்தில் பாதுகாப்புக்காக மாற்றப் பட்டது. ஓர் இரட்டைமாடிக் கட்டிடம் கிடைத்தது. மேலே அரசியற் காரியாலயம். கீழே பத்திரிகைக் காரியாலயம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளராகச் சிவகீதா பிரபாகரன் நியமிக்கப் பட்டார்.

இந்நாட்களில் இராணுவத்தோடான கலந்துரையாடலின்போது கருணாவுக்கு இராணுவமே மொழிபெயர்ப்பு வளங்கியது. கருணா இராணுவத்தினர்களது மொழிபெயர்ப்பை விளங்குவது அரைகுறையாக இருக்கிறது என்று சொல்லி அரசியற் கலைச் சொற்பாவனையும் வட்டாரத் தமிழ் மொழிவழக்குந் தெரிந்த என்னை மொழிபெயர்க்க வரும்படி கேட்டுக்கொண்டார்.

ஜூன் 2006 இல் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு கூட்டம்; நடந்தது. கருணா என்னை மொழிபெயர்பாளராகக் கூட்டிக் கொண்டு சென்றார். பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜா ராஜபக்ஷவை நான் அன்று முதன் முறையாகச் சந்தித்தேன். அந்த கூட்டத்திற்கு தேசிய புலனாய்வு தலைவர் ஜெனரல் கபிலே ஹெர்டே விதாரண வந்திருந்தார். அந்தக் கூட்டம் 3 மணித்தியாலங்கள் நடந்தன.

அதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் கருணாக்களையும் எப்படிப் பாவிப்பது என்பது பற்றியே யோசிக்கப்பட்டது. கூட்டம் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. இந்நாட்களில் சரத் பொன்சேகாவுடன் இராணுவத் தலைமையகத்தில் மற்றொரு சந்திப்பு இடம்பெற்றது.

கருணா என்னை ரி.எம்.வீ பியின் பேச்சாளராக நியமித்தார். நான் பிபிசி, ராய்ட்டர், டெய்லி மிரர், தெரண போன்ற ஊடகங்களுக்கெல்லாம் பேட்டி அளித்தேன்.

மேல் மாடியில் நான் ரி.எம்.வீ.பியினருக்கு அரசியல் வகுப்புகள் எடுத்தேன். அவர்கள் பள்ளியை இடைநிறுத்திப் போராட்ட இயக்கத்தில் சேர வரலாறு நிர்ப்பந்தித்ததால் அவர்களுக்கு இலங்கை வரலாறோ இலங்கை இனப்பகை வரலாறோ, அரசியல் வரலாறோ தெரிந்திருக்கவில்லை.

பிரஜா உரிமை பறிப்பு, கள்ளத்தோணிச் சட்டம், தனிச் சிங்களச் சட்டம் , 1953 ஹர்த்தால், சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் செல்வனாயகம் பண்டாரநாயக்கா ஒப்பந்தம், தமிழ்மொழி விஷேட மஷோதாக் கலவரம், தரப்படுத்தல், வட்டுக்கோட்டை மகா நாடு, 1971 எழுச்சி, 1972 குடியரசுசச் சட்டம,; பண்டாரநாயக்கா கொலை, திருமதி பண்டாரநாயக்கி கொலை முயற்சி, இலங்கைப் பல்லின வாழ்க்கை, காலனித்துவ காலக் கொடுமைகள், மங்கள முனசிங்கா ஆணைக்குழு அறிக்கை, சந்திரிக்கா தீர்வுப்பொதி, போன்றவை எல்லம் முதலிலிருந்த படிப்பிக்க வேண்டியிருந்தது.

இந்தக் கூட்டத்துக்கு பிள்ளையான், இனியபாரதி, ஜெயம், மங்களம், சீலன் ஜெயா போன்ற ரி.எம்.வீ.பியினர் எல்லாரும் வருவார்கள். அதன் பிறகு என்னை மாஸ்டர் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள்.

சிறிது நாளில் பிள்ளையான் என்னை அழைத்துத் தங்களுக்கு ஒரு அரசியல் பேச்சாளர் வேண்டுமென்றும் அந்தப் பணியை என்னைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். எனக்கு அசாத் மௌலானா என்ற பெயரும் சூட்டிக் கொண்டனர்.

இப்படியே மெல்ல மெல்ல சந்தர்ப்பத்தினதும் வரலாற்றினதும் நிர்ப்பந்தத்தால் நான் ரி.எம்.வீ.பியின் எலும்பும் சதையும் இரத்தமும் ஆகிவிட்டேன்.

இதன் பின் எனக்கு தொடர்புகளுக்காக இரண்டாவது கைத்தொலைபேசியும் தரப்பட்டது. அரசியல் நிகழ்சிகளும் சம்பவங்களும் அறிக்கைகளும் முரண்பாடுகளும் உடனுக்குடன் என் தொலைபேசிக்கு அனுப்பப்பட்டன.

ஏறத்தாள ஊக்கமாகச் செயற்படும் எல்லோரோடும் அரசாங்க மற்றும் உச்சியிலுள்ள பாதுகாப்புப் படையினரோடும் அரசியல்வாதிகளோடும் தொடர்புகள் வளர்ந்துகொண்டே வந்தன.

மாட்டன் என்று எனக்குச் சொல்லத்தெரியாததால் என்னால் சுமக்க முடியாத சுமைகள் கூடிக் கொண்டே வந்தன.

பிள்ளையானுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அமல் கணசேனவுக்கும் இடையேயான உறவுகள் வளரத்தொடங்கின.

இப்பொழுது சுரேஷ் ஷாலையுடனான(இவர் இன்று இராணுவப் புலனாய்வுத் தலைவராக இருக்கிறார்) உறவு ஏற்படத்தொடங்கியது. டி.எம்.வி.பி.க்கு பொறுப்பாளராக சுரேஷ் ஷாலை இராணுவ புலனாய்வுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் மேயர் தர அதிகாரி.

கருணாவின் பொதுமக்கள் தொடர்பு பாராட்டத்தக்கதாக இல்லை. அவர் திடீர் திடீர் என ஏற்படும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப இசைவாக்கமடையும் நுண்மாண் நுளைபுலமும், நெகிழ்வுத் தன்மையும், தாராளமனப்பான்மையும் கொண்டவர் அல்லர். தன்னை வியப்பதில் எப்பொழுதும் புழகாங்கிதம் அடைபவர். அவர் எப்போதுமே தன்னை ராணுவ தளபதி என்று நினைத்துக் கொள்பவர். முட்டாள்தனமான அதிகாரிகளுக்கு நான் ஏன் தலைவணங்க வேண்டும் என்று நினைப்பவர். மற்றவர்களுடன் பேசுவதில் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி இருப்பதில்லை. அவர் கோத்தபாய மற்றும் சரத் பொன்சேகாவுடன் மட்டுமே பேசுவார்.

அவர் விசுவாசமாக இரார் என்று இராணவப் புலனாய்வுப் பிரிவு கருதியது. பிள்ளையான் எல்லோருடனும் பழகக்கூடியவர். அவர் மிக உயர்ந்த கேட்கும் திறன் கொண்டவர். தமக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பார் என இராணுவ புலனாய்வுப் பிரிவு நம்பியது.’

(பிள்ளையானுக்கென்று வள்ளுவர் ஒரு குறளைப் பாடியுள்ளார்.

‘ஏற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்

விற்றற்கு உரியர் வியந்து.’-குறள் 1080-

கயவர், எதற்கு உரியவர்? அவருக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதிலிருந்து தப்பத் தம்மைப் பிறர்க்கு எவ்வளவு விரைவாக விலைகூறி விற்கமுடியுமோ அவ்வளவு விரைவாகத் தம்மை விற்றுவிடுவர்.)

முரண்பாடோடு உடன்பாடுடைய கருணா, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நான் ஒத்துழைத்து ஒருங்கிணைக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம்.

அக்கால கட்டத்தில் கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் பல அரசியல் படு கொலைகளும், எண்ணற்ற இனந்தெரியாத கொலைகளும், வெள்ளைவான் ஆட் கடத்தல்களும் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைளும் இடம் பெற்றன.

இவைகள் இராணுவ புலானாய்வுப் பிரிவின் உத்தரவக்கு அமைய ரி.எம்.வி.பி யினால் மேற்கொள்ளப் பட்டதை நான் பின் நாட்களில் அறிந்து கொண்டேன்.

இனந்தெரியாத கொலைகள் இலங்கையின் கலாச்சாரமாகப் படிமமாகி விட்டது. அது இல்லாமல் இனிமேல் ஒரு காலமும் இலங்கை அரசியல் நகராது. அது தமிழீழ விடுதலைப் புலிகள் பிரேமதாசா தேன்நிலவுக் காங்களில் தொடங்கியது.

அது தொட்டசனி விட்டசனியாக ரி.எம்.வி.பி யினால் இரணுவ புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட செயல்பாடுகளால் தத்தெடுக்கப் பட்டது. இன்றும் தொடர்கிறது.

1987 ல் இந்திய அமைதிப்படையுடனான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெடித்த பொழுது பிரேமதாசாவின் ஒத்தாசையோடு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தலைநகரில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோடு சேர்ந்து தமது செலவீனங்களுக்காக ஆட்களைக் கடத்திப் பணம் பறிக்கும் வழக்கமிருந்தது.

வெள்ளைவான் கடத்தலைத் தமிழீழ விடுதலைப் புலிகளே தொடக்கி வைத்தனர்.

கருணா புலி இயக்கத்திலிருந்து பிரிந்தபின் இந்தப் பணப்பறிப்பு வேலைகளையும் கடத்தல்களையும் கொலைகளையும் கருணா பிள்ளையான் குழுவினர் தத்தெடுத்துக் கொண்டனர். இன்று வரை இதுவே நடைமுறையும் யதார்த்தமுமாகும்.

ஜனநாயகப் பாதையில் நம்பிக்கை கொண்டிருந்த நான் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை ஏறு;றுக் கொள்ளாத போதும் இதற்காக அவ்வமைப்பிலிருந்து வெளியேறினால் எனக்கும் எனது குடும்பத்துக்கும் உயிராபத்து ஏற்படும் என்ற அச்சத்தினால் தொடர்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ரி.எம்.வி.பி செய்த எண்ணற்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் சில:

1. தமிழ் நெட் ஆசிரியர் சிவராம் கொலை.

2.மட்டக்களப்பு வீரகேசரி பத்திரிகையாளர் நடேசன் கொலை.

3.திருகோணமலை தமிழர் புனர்வாழ்வு அமைப்பாளர் விக்கினேஸ்வரன் படுகொலை.

4.தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை.

5. கொழும்பு வர்த்தகர் பாலா கடத்தப்பட்டுப் படுகொலை.

6. கிழக்குப் பலகலைக் கழக உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை. இவர் பொட்டுஅம்மானுக்கு வேலை செய்கிறார் என்ற சந்தேகத்தின்பேரில் கொல்லப் பட்டார்.(இன்று பொட்டு அம்மான் அரசபுலனாய்வோடு இருப்பது எல்லாருக்கும் தெரியும்)

7.மட்டக்களப்பு மாவட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்க செயற்பாட்டாளர் இருவர் கடத்தப்பட்டுப் படுகொலை.

8.ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமத்துங்கா கொலை.

9. பிரகீத் எக்னெலிகொட கொலை. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது இவர் பிள்ளையான் குழுவால் கொலைசெய்யப் பட்டார்.

மற்றும் 150 பேருக்கு மேலனவர்கள் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப் பட்டனர்.

இந்தக் கொலைகள் அனைத்தும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் குறிவைக்கப்பட்டு, இராணுவ உளவப்படையால் புறச் சூழல்கள் ஏற்படுத்தப் பட்டு ரி.எம்வி.பி யினால் படுகொலை செய்யப் பட்டனர்.

பிள்ளையானும் அவரது ரி.எம்.வி.பி யும் கூலிக்குக் கொல்லும் படையேயொழிய அதற்கும் ஒடுக்கப்பட தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ரி.எம்.வி.பி யின் இந்தக் கொலையாளிகளை இராணுவப் புலனாய்வுத்துறை கடவுச் சீட்டு எடுத்துக் கொடுத்து பணமும் கொடுத்து வெளிநாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைப்பர். பெரும்பாலானோர் பரிஸ் நகரத்துக்கும் சிலர் மத்திய கிழக்குக்கும் அனுப்பி வைக்கப் பட்டனர்.

பரிஸ்சில் இலங்கைத்தூதரகமும் பிள்ளையானின் அரசியல் ஆலோசகருமான ஞானம்(ஸ்டாலின்) என்பவரும் அகதியாவதற்கு வழி செய்துகொடுத்துப் பராமரித்து வருகின்றனர். அவர்கள் இப்பொழுதும் பரிசில் வாழ்கின்றனர்.

பரிசில் ரி.எம்வி.பிக்கு ஒரு பெரிய கிளையும் இலங்கைத் தூதரகத்தோடு இணைந்து வேலை செய்யும் குண்டர் படையும் உண்டு. இவர்கள் ஞானம் வீட்டில் அடிக்கடி கூடுவர். இலங்கைத் தூதரகம் வேண்டிய பண உதவிகளைச் செய்யும். பிரான்சில் உள்ள ரி.எம்வி.பி கொலைப்படை சிறிதரன், தவேந்திரராசா, சதீஸ், மாறன், அசோக் மற்றும்பலர்.

கருணாவின் மனைவி லண்டனில் வாழ்பவர். கருணாவுக்கு இராணுவப் புலனாய்வுத்துறை ஒரு சிங்களவரின் பேரில் இராஜதந்திரக் கடவுச் சீட்டு எடுத்துக் கொடுத்து பண்டாராநாயக்கா விமான நிலையத்துக்கூடாக லண்டனுக்கு அனுப்பி வைத்தனர்.

கருணா லண்டன்போய் இறங்கி 5 நாட்களுக்குப் பிறகு போலிக் கடவுச் சீட்டு விவகாரத்தை கிருஷ்ணன் என்பவர் மூலம் லண்டன் உளவுத்துறை இலாகவுக்கு சொல்லிக் கைது செய்யப் பண்ணினார்கள்.

இந்தக் கிருஷ்ணன் பலநாட்டுக் கடவுச்சீட்டுகளைவைத்து முன்நாள் சாவகச்சேரிப் பாராளமன்ற உறுப்பினர் நவரத்தினத்தோடு சேர்ந்து உலக உளவு நிவுனங்களுக்கு வேலை செய்தவர். கிழக்குப் புலிகளைப் பிளப்பதில் முக்கிய பங்கு வகுத்தவர்.

யாரிந்த கிருஷ்ணன். இவர் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கட்டுபத்தையில் புளொட் உமாமகேஸ்வரன் சேவையராகக் கல்வி கற்கும்பொழுது இவரும் அவரோடு சேர்ந்து சேவையர் கல்வி கற்றவர்.

உமாமகேஸ்வரன் அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைச் செயலாளர். கிருஷ்ணன் சாவகச்சேரிப் பாரளமன்ற அங்கத்தவரோடு சேர்ந்து உலகப் பாராளமன்றக் கூட்டங்களுக்குப் போனவர். கியுபாவில் நடந்த இளைஞர்மகாநாட்டுக்கும் கிருஷ்ணன் போனார்.

இவரிடம் 5 நாடுகளின் வித்தியாசம் வித்தியாசமான கடவுச் சீட்டு உண்டு. அந்தக் கடவுச் சீட்டுகளைப் பலருக்கக் காட்டியிருக்கிறார். கருணா புலி இயக்கத்திலிருந்து பிரிந்த பொழுது கிருஷ்ணன்தான் இணைப்பு வேலைகளைச் செய்தவர்.

(தொடரும்…)