நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர் சிக்கனத்தை முன்னெடுக்கும் பிளம்பர்கள் சங்கம்!

நாம் வாழும் இந்த பூமியில் 79 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. ஆனால், இதில் 97.50 சதவீதம் கடல்நீர்தான். மீதமுள்ள 2.5 சதவீதம் நன்னீராகவும், மூன்றில் ஒரு பங்கு, பனிக்கட்டிகளாகவும் உள்ளன. எனவே, மிக சொற்ப அளவிலான தண்ணீரை நமக்கு கிடைக்கிறது. இதனால், பெருமளவு மழையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, வேகமாய் வளரும் தொழில் துறை உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம், மழைப்பொழிவு குறைவால் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கிறது. நிலத்தடி நீர்மட்டமும் வறண்டு, பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. பல நாடுகளில் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர். இந்த நிலை தொடருமானால் தங்கத்தைக் காட்டிலும், தண்ணீரின் மதிப்பு அதிகரித்துவிடும்.

எனவே, மரங்கள் வளர்ப்பு மூலம் நீராதாரத்தை அதிகரிப்பது, மழை நீரை சேகரிப்பது, நீரின் உபயோகத்தைக் குறைத்துக் கொள்வது, மறுசுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்துவது என தண்ணீரை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் எல்லா வழிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், தண்ணீர் சிக்கனத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்துள்ள இந்திய பிளம்பர்கள் சங்கத்தின் கோவை கிளைத் தலைவர் மாணிக்கம், செயலர் பிரசாத், பொருளாளர் பாலகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பாலிகா ஆகியோரிடம் பேசினோம்.

“பருவ மழை தவறியதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. பல நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. கோவை உள்ளிட்ட பல நகரங்கள் தண்ணீருக்குத் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. கோவை நகரின் தற்போதைய தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 247 மில்லியன் லிட்டராக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 25 சதவீதம் உயரும். கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் 800 முதல் 1,000 அடிக்கும்கீழே போய்விட்டது. அதேபோல, கழிவுநீரை நாம் கையாளும் முறைகளும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதாக உள்ளன.

எனவே, இந்திய பிளம்பர் சங்கம் நீர்மேலாண்மைப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதுடன், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஓர் இயக்கமாகவே மேற்கொண்டுள்ளது. தண்ணீர் சேமிப்பு, குறைந்த அளவு தண்ணீர் உபயோகம், மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்பாடு என மூன்று வழிகளில் இந்த இயக்கத்தை கொண்டுசெல்கிறோம்.

விழிப்புணர்வு போட்டிகள்!

`ஐ சேவ் வாட்டர்’ என்ற இயக்கத்தை இந்திய பிளம்பர்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்காக விழிப்புணர்வுக் கையேடுகள் தயாரிக்கப்பட்டு, நாடெங்கும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படுகிறது. மேலும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

`ஏரேட்டர்ஸ்’ கருவி!

வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகளில் அதிக அளவு தண்ணீர் வீணாக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் தண்ணீர்க் குழாய்கள், பல மடங்கு தண்ணீரை வீணடிக்கின்றன. எனவே, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக காற்றுத் தெளிப்பான் (ஏரேட்டர்ஸ்) என்ற ஜெர்மன் தயாரிப்புக் கருவியை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளோம். தண்ணீர்க் குழாய்களில் இதைப் பொருத்துவதன் மூலம், 40 சதவீதம் அளவுக்கு தண்ணீரை சேமிக்க முடியும். இதைத் தயாரிக்கும் நிறுவனத்துடன் பேசி, மக்களுக்கு குறைந்த விலையில் இந்தக் கருவிகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தண்ணீர்க் குழாயில் நீர் வெளியேறும் பகுதியில் இதை எளிதாகப் பொருத்திக்கொள்ளலாம். எளிய இந்தக் கருவியின் குறைந்தபட்ச விலை ரூ.15-தான். சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை, வாஷ்பேசின் என எல்லா இடங்களிலும் உள்ள குடிநீர்க் குழாய்களில் இதை பொருத்திக்கொள்லலாம்.

இதன் மூலம் கோவையில் மட்டும் ஓராண்டில் 5 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். நாடு முழுவதும் ஓராண்டில் 130 கோடி லிட்டர் தண்ணீரை சேமிப்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்.

`ஏரேட்டர்’ என்ற இந்த சிறிய கருவி, தண்ணீர்க் குழாய்களுடன் பொருத்தும்போது, வெளிப்புறக் காற்றை உள்ளே நுழைத்து, வெளிவரும் தண்ணீரின் அளவைக் குறைப்பதுடன், நுரை கலந்த தண்ணீரை வெளியேற்றுகிறது. இதனால், குறைந்த அளவு தண்ணீரை, நிறைவாகப் பயன்படுத்தலாம்.

இந்தக் கருவியை பெங்களூருவில் உள்ள, சர்வதேச பிளம்பிங் மற்றும் மெக்கானிக்கல் அலுவலர் சங்கத்தின் பரிசோதனைக் கூடத்திலும் பரிசோதனை செய்துள்ளோம்.

2013-ம் ஆண்டு முதல், சர்வதேச தரத்திலான தண்ணீர் சேமிப்புக் கருவிகள் விற்பனையை பிளம்பர்கள் சங்கம் சிபாரிசு செய்வதுடன், ஊக்குவித்து வருகிறது. அதேபோல, குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் மோட்டார்களையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். தண்ணீர் சேமிப்பை நாம் பழக்கமாக மாற்றிக் கொள்வதுடன், சான்று பெற்ற தண்ணீர் கருவிகளைப் பொருத்துவது அவசியம்.

கோவையில் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக சிறுதுளி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களிடம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கோவையில் ஸ்ரீராமகிருஷ்ணா தொழிற்பயிற்சி மையத்தின் உதவியுடன் ஓர் ஆய்வகத்தையும் உருவாக்கியுள்ளோம் ” என்றனர்.