மாகாண எல்லைகள் மாற்றப்படக்கூடாது தமிழர் நிலத்தொடர்ச்சி தொடரவேண்டும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தொடர்ச்சி பாதிக்கப்படாமல், இம் மாகாணங்களின் நிலப்பரப்புகள் ஏனைய மாகாணங்களுடன் எதிர்காலத்தில் இணைக்கப்படும் நிலைமை ஏற்பட விடாமல் தடுப்பது அவசியம். இதற்கு அரசியல் யாப்பு ரீதியாக இப்போதுள்ள மாகாண எல்லைகள் மாற்றியமைக்கப்படாமல் இருப்பது அவசியம் எனத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சருமான அ. வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார்.திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தொடர்பாக அறிக்கையொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த அறிக்​ைகயில் அவர்மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரதேச செயலக நிலப்பரப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளின் அனுமதியில்லாமல்

மாற்றியமைக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்தல் வேண்டும். அத்துடன் அரச காணிகளை வழங்குவது தொடர்பாக அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண ஆட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறையில் உறுதிப்படுத்துதல் வேண்டும்.

இதற்கான கோரிக்கைகளை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான பேச்சுவார்த்தைகள் மூலமும் வலியுறுத்தி அரசு சட்டபூர்வமாக இவற்றை நடைமுறைப்படுத்துவதை தமிழர் தரப்பு உறுதிப்படுத்த வேண்டும். இதற்குத் தமிழர் தரப்பிலுள்ள அனைத்துப் பிரதானமான அரசியல் சக்திகளும், அமைப்பு ரீதியான சமூக சக்திகளும் இணைந்து காத்திரமாக செயற்படுவது காலத்தின் அவசியமாகும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் கொண்டிருந்த தமிழர்களின் நிலத் தொடர்ச்சியை இல்லாது செய்யும் திட்டமிட்ட நோக்குடனேயே முன்னர் வெலி ஓயா என ஆரம்பிக்கப்பட்ட அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விடயம் யுத்தத்தின் காரணமாக அரசினால் தொடர முடியாமல் போய்விட்டது. இப்பொழுது திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் கணிசமான அளவு நிலப் பகுதிகளை ஒருங்கிணைத்த வகையில் ஒரு விரைந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதிகள் அரசின் குடியியல் நிர்வாகங்களின் கீழில்லாமல் அரச படைகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

1983 க்கு முதல் ஒரு சிறிய அளவிலேயே சிங்களவர்கள் வெலிஓயா திட்டத்தில் குடியேற்றப்பட்டிருந்தனர். ஆனால் 2009 க்குப் பின்னர் அரச படையினரின் பாதுகாப்புடனும் துணையுடனும் மிகப் பெருந்தொகையில் தென்னிலங்கை மாவட்டங்களிலிருந்து சிங்களவர்கள் அழைத்து வரப்பட்டு, தேவையான உதவிகள் அனைத்தையும் அரசு வழங்கி விவசாய மற்றும் குடியிருப்பு நில உறுதிப் பத்திரங்களையும் கொடுத்து குடியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் முழு விபரங்களையும் பெற முடியாத அளவுக்கு அப்பகுதிகள் அரச படைகளின் பாதுகாப்பு வலயங்கள் போல் நிர்வகிக்கப்படுகின்றன என்பதும் உண்மை.

அப் பகுதிகளில் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை. வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அண்மையில் கூறியுள்ளார். அதனை உண்மை என ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஜனாதிபதியின் தலைமையில் அமைந்துள்ள வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கடந்த கூட்டத்தில் ஜனாதிபதி, அப்பகுதிகளில் தமிழர்கள் சட்டப்படியாக கொண்டிருந்த நிலங்கள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறார். குறிப்பிட்ட தமிழர்கள் சட்டப்படி கொண்டிருந்த காணிகள் அவர்களுக்கு மீள வழங்கப்படுதல் என்பது ஒரு விவகாரமே.

அதற்கும் மேலாக, அரசாங்கத்தின் பாரிய அரச உதவியுடனான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும்,வடக்கு கிழக்கு மாகாணங்களின் தொடர்ச்சியை இல்லாமல் செய்வதுவும்,

குறிப்பிட்ட மூன்று மாவட்டங்கிளனதும் இணைந்த பெரும் நிலப்பரப்பை வடக்கு கிழக்கிலிருந்து துண்டாடி வடமத்திய மாகாணத்தோடு இணைக்கும் முயற்சிகளுமே

இவ்விடயத்தில் உள்ள பிரதானமான பிரச்சினைகளாகும்.

வடமத்திய மாகாணத்தில் காலம் காலமாக விவசாயம் செய்து வந்துள்ள சிங்களவர்களில் நிலமற்றோர் தாங்களாக தங்களது மாவட்டத்துக்கு அண்மித்த மாவட்டங்களை நோக்கி தமது பொருளாதார வாழ்வுக்காக இடம்பெயர்ந்து குடியேறி காட்டு நிலங்களை களனிகளாக்கி தமது இருப்பை அமைத்துக் கொள்வது வேறு விடயம். எனினும், இவ்வாறான ஒன்றை தமிழர்கள் மேற்கொள்கிற போது அரச படைகள் அனுமதிப்பதில்லை. அரச நிலங்களெல்லாம் அரச படைகளுக்கும் சிங்களவர்களுக்குமே சொந்தமானவை என்பது போல அரச படைகள் நடந்து கொள்ளும் விடயத்தில் அரசாங்கம் தலையிடுவதுமில்லை.

அரச நிலங்களில் எந்தவொரு துண்டையேனும் எந்தவொரு நபருக்கு வழங்குவதாயினும் அதனைத் தீர்மானிப்பது மாகாண சபையே என்பதுதான் இலங்கையின் அரசியல் யாப்பு வழங்கியிருக்கும் அதிகாரம். ஆனால், இது மத்திய அமைச்சர்களாலும் மதிக்கப்படுவதில்லை. எந்தவொரு ஜனாதிபதியாலும் இதுவரை மத்திக்கப்படவில்லை. தமிழர்களின் பிரதேசங்களை சிங்கள மயமாக்க முயற்சிப்பது இந்த நாட்டில் அரசியல் அமைதியை நிலைநாட்டாது. அது தேசிய நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை ஆகியவற்றுக்கு எதிரானது என்பதை உணர்ந்து, போரினால் வலிகளைச் சுமந்து நிற்கும் தமிழ் மக்களுக்கு அரசின் மீதும் நாட்டின் சட்டங்களின் மீதும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.