ஹூவாவே அதிகாரி கனடாவில் கைது: சண்டையில் கிழிந்த சட்டை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்றொரு சொல்லாடல் உண்டு. அது தொடர்பில்லாத இரண்டு விடயங்களைத் தொடர்புபடுத்துவது பற்றிய நயமான குறியீடு. அரசியலில் நடக்கும் விடயங்கள் பலவற்றை, இச்சொல்லாடல் மூலம் விளக்கவியலும். மேம்போக்காகப் பார்க்கும்போது, தொடர்பே இல்லாதது போலத் தெரியும் விடயங்களுக்குப் பின்னால், மறைந்துள்ள காரணிகள் வியப்பளிப்பன. அதுபோன்றதொரு நிகழ்வு அண்மையில் நடந்தேறியுள்ளது.தொலைத்தொடர்புத் துறையில் முன்னோடியாகத் திகழ்கின்ற ‘ஹூவாவே’ என்கிற சீன நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி மென்ங் வான்சொவ், கனடாவில் கைது செய்யப்பட்டமையானது இவ்வாறானதொரு நிகழ்வு.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார யுத்தம், புதிய கட்டத்தை நோக்கி நகர்கின்ற நிலையில், இக்கைதானது அதன் பகுதியாகும்.

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், ‘ஹூவாவே’ நிறுவனம், அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை மீறி, ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதைக் காரணம் காட்டி, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, மென்ங் வான்சொவ்வை கனடா கைது செய்துள்ளது.

மென்ங் வான்சொவ், தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமன்றி, ‘ஹூவாவே’ நிறுவனத்தின் தலைவரின் மகளும் அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் ஆவார்.

இந்நிகழ்வு, பல்கோண அரசியல் பரிமாணங்கள், எவ்வாறு ஒருபுள்ளியில் சந்திக்கின்றன என்பதை விளக்கப் பயனுள்ளதாகும்.

‘ஹூவாவே’: தொலைத்தொடர்பின் புதிய நட்சத்திரம்

உலகளாவிய தொலைத்தொடர்புத் துறையில், அமெரிக்க நிறுவனங்கள் நீண்டகாலமாகச் செல்வாக்குச் செலுத்தி வந்தன. ஆனால், கடந்த ஒரு தசாப்த காலமாக, அந்நிலைமை மாற்றமடைந்து வருகிறது.

குறிப்பாக, நவீன தொழில்நுட்பத்தினதும் திறன்பேசிகளினதும் வர்த்தகத்தில், தனிப்பெருந்தலைவராக, முன்னிலையில் இருந்து வந்த அமெரிக்காவின் ‘அப்பிள்’ நிறுவனத்தை, தென்கொரிய நிறுவனமான ‘சாம்சுங்’கின் வருகை, இல்லாமல் செய்தது. ‘ஆப்பிள்’ இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான ‘ஹூவாவே’ வேகமாக வளர்ந்து, இப்போது ‘அப்பிளை’ மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றம், திறன்பேசிகளின் விற்பனைகள் தொடர்பானது.

‘ஹூவாவே’ வெறுமனே திறன்பேசிகளை விற்பனை செய்யும் நிறுவனம் மட்டுமல்ல. தொலைத்தொடர்புத் துறையின் முன்னோடியாக உருவெடுத்துள்ளது.

இன்று, உலகளாவிய தொலைத்தொடர்புத் துறையின் நவீன தொழில்நுட்பத்தின் சொந்தக்காரர்களாக, ‘ஹூவாவே’ நிறுவனம் உள்ளது. உலகில் 170க்கும் மேற்பட்ட நாடுகளில், ‘ஹூவாவே’யின் தொழில்நுட்பமும் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த பத்தாண்டுகளில், ‘ஹூவாவே’யின் வளர்ச்சி, அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மட்டுமன்றி, பொருட்களையும் சேவைகளையும் குறைந்த விலையில் வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாக ‘ஹூவாவே’யின் வளர்ச்சி, போட்டியாளர்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, அலைபேசித் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்றழைக்கப்படும் 5G தொழில்நுட்பத்தை நோக்கிய நகர்வில், ‘ஹூவாவே’யின் பங்கு முக்கியமானது. இந்த 5G உட்கட்டமைப்பை வழங்கக்கூடிய நிறுவனங்களில் முதன்மையானது ‘ஹூவாவே’. அதேவேளை, இதை மிகுந்த பொருட்செலவில் இன்றி, குறைந்த விலையில் வளர்முக நாடுகளுக்கு வழங்குவதற்கும் ‘ஹூவாவே’ தயாராக உள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல மூன்றாமுலக நாடுகளுக்கு, மிகக்குறைந்த விலையில் 4G தொழில்நுட்பத்தைச் சாத்தியமாக்கிய பெருமை, ‘ஹூவாவே’யைச் சாரும். இதன் தொடர்ச்சியாக, 5Gயை நோக்கிய நகர்வுக்கு ‘ஹூவாவே’ தயாராகிறது.

170,000 பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில், 76,000 பேர் ‘ஆய்வும் அபிவிருத்தியும்’ என்ற பகுதியில் பணிபுரிகிறார்கள். ஆய்வுக்கும் புத்தாக்கத்துக்கும் இந்நிறுவனம் வழங்கும் முக்கியத்துவம், இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

இதனால், நவீன தொழில்நுட்பத்தின் முன்னோடியாக வளர்ந்துள்ள ‘ஹூவாவே’, உலகின் பல்வேறு நாடுகளுக்கு 5G தொழில்நுட்பத்துக்கான உட்கட்டமைப்பை வழங்கும் நிறுவனமாக உள்ளது.

இந்த மாற்றங்கள், அமெரிக்காவோ அல்லது அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களோ விரும்புகின்ற மாற்றங்கள் அல்ல. இதனாலேயே “ஹூவாவே, மறைமுகமாக உளவு வேலைகளில் ஈடுபடுகிறது. எனவே, ‘ஹூவாவே’யின் தொழில்நுட்பங்களை, உலகநாடுகள் பயன்படுத்தக் கூடாது” என, அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகக் கோரி வருகிறது.

அமெரிக்க – சீன வர்த்தகப் போர்

அண்மைக் காலமாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர், புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், 250 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனப் பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த சுங்கவரியானது, இந்தப் போரின் தொடக்கமாக இருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், 110 பில்லியன் அமெ. டொலர்கள் பெறுமதியான அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரிவிதித்தது.

அமெரிக்காவில் இருந்து 130 பில்லியன் அமெ.டொலர்கள் பெறுமதியான பொருட்களையே சீனா இறக்குமதி செய்கிறது. அதில் 110 பில்லியன் அமெ.டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்குத் தடை விதித்தாகிவிட்டது.

மாறாக, சீனாவில் இருந்து 531 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை, அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இதில் தடை விதிக்கப்படாதுள்ள 281 பில்லியன் அமெ. டொலர் பெறுமதியான பொருட்களுள் பிரதானமானவை அலைபேசிகள், திறன்பேசிகள், கணினி உபகரணங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் ஆகியவையாகும்.

‘அப்பிள்’ போன்ற அமெரிக்க நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சீனாவிலேயே உள்ளன. அதன் திறன்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை, சீனாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவற்றுக்கு வரிவிதிப்பது அமெரிக்க நிறுவங்களுக்கே பாதகமாக அமையும்.

சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை, அமெரிக்கா தொடக்கியமைக்குச் சில காரணங்கள் உண்டு. முதலாவது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில், ஆண்டுதோறும் 262 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகத்தை, சீனா மேற்கொள்கிறது. இது அமெரிக்காவைவிட அதிகமானதாகும். இது, அமெரிக்க வர்த்தகத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதேவேளை, சீனாவுக்கான அமெரிக்கக் கடன், படிப்படியாக அதிகரித்து, இன்று 1.3 ட்ரிலியன் அமெ. டொலர்களில் (1,300 பில்லியன்) உள்ளது.

இரண்டாவது, சீனா ஆரம்பித்துள்ள Made in China 2025 (சீனத் தயாரிப்பு 2025) முன்னெடுப்பானது, 2025ஆம் ஆண்டளவில் சீனத் தயாரிப்புகளின் உதவியுடன், நவீன தொழில்நுட்பத்தைக் குறைந்த விலையில், உலகெங்கும் வழங்கும் நோக்கமுடையது.

இதை அமெரிக்கா, வன்மையாக எதிர்க்கிறது. அக்டோபர் மாதம் நான்காம் திகதி, அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், சீனா குறித்து, ஒரு பிரதான கொள்கை உரையை ஆற்றினார். அதில், சீனா அதனது, ‘சீனத் தயாரிப்பு 2025’ திட்டத்தைக் கைவிட வேண்டுமென எச்சரித்திருந்தார்.

“சீனாவின் இத்திட்டம், ‘தானியங்கி இயந்திரவியல், உயிரித்தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உளவுபார்ப்பு உட்பட, உலகின் மிகவும் முன்னேறிய தொழிற்றுறைகளில் 90 சதவீதத்தைக் கையகப்படுத்துவதற்கான முயற்சி” என்று குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்கத் துணை ஜனாதிபதியின் உரையைப் பல நோக்கர்கள், “சீனாவுடனான புதிய, கெடுபிடிப்போரின் உதயம்” என்று குறிப்பிடுகிறார்கள்.

மூன்றாவது, 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், அமெரிக்கப் பொருளாதாரம் தடுமாறுகின்ற நிலையில், அடாவடியாக அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய எல்லைக்கு அமெரிக்கா சென்றுள்ளது.

அமெரிக்கா முன்னெடுத்த வர்த்தகப்போரின் விளைவுகளை, சீனாவின் பதில் நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்காவே எதிர்நோக்குகிறது.

இதன் பயனாக, தற்காலிகச் சமாதானமொன்றுக்கு அமெரிக்கா விரும்பியது. டிசெம்பர் மாதம் இரண்டாம் திகதி, ஜி20 மாநாட்டின் பகுதியாக, அமெரிக்க-சீனத் தலைவர்கள் சந்தித்து, இது தொடர்பில் நேரடியாகப் பேசினார்கள். ஆனால், டிசெம்பர் முதலாம் திகதியே, ‘ஹூவாவே’யின் தலைமை நிர்வாக அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்டுவிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீனாவுடனான பேச்சுகள் வெற்றியளித்திருப்பதாகத் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் அவர், மென்ங் வான்சொவ்வின் கைது பற்றி அறிந்திருக்கவில்லை. இது அமெரிக்காவின் அதிகார அடுக்கில் உள்ளவர்கள், சீனாவுடன் எதுவித சமரசத்துக்கும் தயாராக இல்லை என்பதுடன், சீனாவை ஆத்திரமூட்டுவதன் ஊடாக, இன்னோர் இராணுவ நடவடிக்கைக்குத் தள்ளுவதற்கான உபாயமாக, இதைக் கொள்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.

மென்ங் கைது செய்யப்பட்டமை, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக போரில், சமரசத்துக்கான எந்தவொரு சாத்தியக்கூறையும் இல்லாது செய்துள்ளது. இதனாலேயே இந்தக் கைது நடவடிக்கையை, பிற மேற்குலக நாடுகளும் வர்த்தகர்களும் அச்சத்துடன் நோக்குகின்றனர்.

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த பிரிட்டிஷ் பினான்சியல் ரைம்ஸ்’, இக்கைதை ‘ஆத்திரமூட்டலாக’ வர்ணித்ததுடன், அநியாயமான சட்ட அமுலாக்கம் இல்லாமல், அதன் அரசியல் பொருளாதார முனைகளைப் பின்தொடர்வதற்காக, அமெரிக்க அதிகாரத்தினது பயன்பாடு என்று கண்டித்தது.

அடுத்தது என்ன?

இக்கைது நடவடிக்கையோடு, கவனிப்புக்கு உள்ளாக வேண்டிய இரண்டு விடயங்களை நோக்குதல் தகும். முதலாவது, அமெரிக்காவில் விடுக்கப்பட்ட பிடிவிறாந்தை, கனடா நடைமுறைப்படுத்தியதானது, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக, கனடா செயற்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அதேவேளை, அமெரிக்க – சீனப் போட்டியில், கனடா இழுபடுவது, அமெரிக்கா – சோவியத் யூனியன் காலப்பகுதியை நினைவூட்டுகிறது.

அமெரிக்கா, மென்ங் வான்சொவ்வை நாடு கடத்தும்படி கோருகிறது. சீனா, மென்ங் வான்சொவ், உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அல்லாவிடின், மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் கூறியுள்ளது.

‘ஹூவாவே’ நிறுவனம், சட்டவிரோதமான முறையில் ஈரானுக்குத் தொழில்நுட்பத்தை விற்பனை செய்தது என்ற குற்றச்சாட்டை, ‘ஹூவாவே’ மறுத்துள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, வழக்கு விசாரணை கனடாவில் நடைபெற்று வருகிறது. மென்ங் வான்சொவ்வுக்குப் பிணை வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் கோரிய நிலையில், கனடிய அதிகாரிகள், அவர் தப்பியோடுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால், அவருக்குப் பிணை வழங்கப்படக் கூடாது என்று வாதிட்டனர்.

இந்நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்ட சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், ‘அமெரிக்கா சொன்னதற்காக, மெங் வான்சொவ் கைது செய்யப்பட்டமையானது, அவரது சட்டபூர்வ உரிமைகளை மீறிய நடவடிக்கை ஆகும். இது, சட்டத்தைப் புறக்கணித்த செயல். கைது செய்யப்பட்டுள்ளவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவரது சட்டபூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளுக்கு, கனடா பொறுப்பேற்க வேண்டிவரும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேட்கப்பட்டபோது அவர், “சீனாவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது” என்று மட்டும் பதிலளித்தார். இது, கனடா மிகப்பெரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

சீனாவில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள, கனடிய அமெரிக்கத் தொழில்முனைவர்கள், நிறுவனங்கள், சீனா கடுமையாகப் பதிலளிக்கும் பட்சத்தில், மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என அஞ்சுகிறார்கள்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், தனது இராணுவ வலிமையின் மீது வைத்துள்ள அதீத நம்பிக்கையினதும் சீனாவின் பொருளாதார வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதன் வெளிப்பாட்டினதும் கூட்டுச் செயற்பாடாக, இந்தச் செயலை அவதானிக்க முடியும்.

இதுவரை, தொழில்நுட்பத்தின் உதவியுடன் இராணுவ ரீதியில், அமெரிக்கா வகித்து வந்த உயர்நிலை இன்று கேள்விக்குள்ளாகி உள்ளது. ‘ஹூவாவே’ மீதான நடவடிக்கைக்கு, சீனா எவ்வாறு பதில் அளிக்கும் என்பதை, எல்லோரும் ஆவலுடனும் அச்சத்துடனும் நோக்குகிறார்கள்.

ஏனெனில், 2010ஆம் ஆண்டு, சீன எதிர்ப்பாளரான லியோ ஸியோபோவுக்கு, சமாதானத்துக்கான நோபல் பரிசை, நோர்வே வழங்கியதன் பின்னணியில், நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகள் நெருக்கடிக்கு உள்ளாகின.

இதனால் நோர்வே, மிகப்பெரிய பின்னடைவைக் கண்டது. சீனாவில் உள்ள நோர்வேஜியத் தூதரகம் மூடப்பட்டது. வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ஏழு ஆண்டுகளின் பின்னரே, நோர்வேயுடனான உறவைச் சீனா சரிசெய்தது.

இதேநிலை, கனடாவுக்கும் ஏற்படுமோ என்ற அச்சம் பலரிடம் உண்டு. அதையும் தாண்டி, கனடா வேறுவகையில் எதிர்வினையாற்றுமோ என்ற வினாவும் உண்டு. உலகின் புதிய இயங்குதிசையைச் செதுக்கும் ஒரு நிகழ்வாக இதை நோக்கலாம்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போட்டியில் கிழியக் போகும் சட்டை, ‘ஹூவாவே’யினுடையதா அல்லது கனடாவினுடையதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.