உரிமை பற்றி கதைக்கின்ற சம நேரத்தில் அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்வதுதான் முஸ்லிம்களின் அரசியல் சாணக்கியம்!

– சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி
முஸ்லிம் மக்கள் வாழ தெரிந்தவர்கள், அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்கள் விவேகமானவை, அவர்களின் உரிமைகளை பற்றி கதைத்து கொள்கின்ற சம நேரத்திலேயே அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்தும் வருகின்றார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச முன்னாள் உப தவிசாளருமான பொறியியலாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளராக இக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த வாரம் நியமனம் பெற்றது தொடர்பாக காரைதீவில் உள்ள இவரின் இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை பெற்று கொடுக்க முடியும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே நம்புகின்றார். இந்த நம்பிக்கையில்தான் அடுத்த வருடம் தமிழ் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஒத்துழைப்புடன் மிக மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவார்கள் என்று வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக தமிழ் மக்களுக்கு கிடைக்க உள்ள நன்மைகளை வேறு இடை முகவர்கள் மூலமாக அன்றி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலமாக நேரடியாகவே பெற்று கொடுப்பது உசிதமானதும், சால பொருத்தமானதும் என்பது எனது நிலைப்பாடு ஆகும். ஆகவேதான் நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அமைப்பாளராக இணைந்து உள்ளேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லவர். எளிமையானவர். நேர்மையானவர். இதனால்தான் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ஏராளமான தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளார்கள். தமிழர்களின் பாரம்பரிய பூமியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொடி கட்டி பறக்கின்றது. ஆகவே இவர் தலைமையிலான சுதந்திர கட்சியில் அமைப்பாளராக நான் செயற்படுவது குறித்து பெருமையும், பெருமிதமும் அடைகின்றேன்.

நான் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் செயற்பட்டவன்தான்.தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு காரைதீவு பிரதேச சபைக்கு உப தவிசாளராக தெரிவாகி இருந்தேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றுவனவாக உள்ளன. 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டு வந்து அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் நடக்கும் என்று சொல்லி இளைஞர்களை உசுப்பேற்றினார்கள். கடைசியில் தமிழீழமும் கிடைக்கவில்லை, தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிட்டவில்லை.

இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் தெரிவித்தே ஆக வேண்டும். முஸ்லிம் மக்கள் வாழ தெரிந்தவர்கள். அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்கள் விவேகமானவை. அவர்களின் உரிமைகளை பற்றி கதைத்து கொள்கின்ற சம நேரத்திலேயே அவர்களின் இடங்களை அபிவிருத்தி செய்தும் வருகின்றார்கள். அவர்களுடைய வாழ்வாதாரம் செழித்து காணப்படுகின்றது. ஆனால் தமிழ் தேசிய அரசியல் மூலமாக இது வரை தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடைக்க பெறவில்லை என்பதோடு எந்தவொரு அபிவிருத்தியும் கிட்டவில்லை என்பதும் பெருங்கவலைக்கு உரிய விடயங்கள் ஆகும்.

இந்நிலைமையில்தான் முஸ்லிம்களினதும், முஸ்லிம் பிரதேசங்களினதும் மேம்பாடு தங்கமாகவும், தமிழர்களினதும், தமிழ் பிரதேசங்களினதும் மேம்பாடு தகரமாகவும் இருப்பதை தெட்ட தெளிவாக கிழக்கு மாகாணத்தில் கொண்டு கொள்ள முடிகின்றது. தமிழ் மக்களின் அரசியலில் நின்று நிலவி வருகின்ற இந்த இடைவெளி நிச்சயம் நிரப்பப்படுவதன் மூலமாகவே எதிர்காலத்திலாவது தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகள் களை கட்ட முடியும்.

கருணா அம்மான் பிரதி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் எத்தனையோ நன்மைகளை அரசாங்கம் மூலமாக தமிழ் மக்களுக்கு பெற்று கொடுத்து உள்ளார். அவற்றை அவர் வெளிப்படுத்தவும் இல்லை. அவை வெளியில் வரவும் இல்லை. ஒரே நாளில் 71 பேருக்கு சுகாதார உதவியாளர் நியமனத்தை இவர் பெற்று கொடுத்த அபார திறமையை நான் இவரின் இணைப்பாளராக பணியாற்றிய காலத்தில் கண்டு அசந்து போனேன். தமிழ் தேசிய கூட்டமைப்பால் இவ்வாறான ஒரு சாதனையை மேற்கொள்ள முடியுமா?

தமிழ் மக்கள் இனி மேலாவது ஆவேச பேச்சுகளுக்கும், உணர்ச்சி கொப்பளிப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு அவற்றை பெற்று தர கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வருகின்ற தேர்தல்களில் அமோகமாக வாக்களிக்க வேண்டும் என்று விநயமாக கேட்டு கொள்கின்றேன்.