தலிபான்களுக்கு எதிராக தேசியக்கொடி ஏந்தி போராட்டம்

தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற முதலாவது ஆர்ப்பாட்டம் இதுவாகும். ஆர்ப்பாட்டத்தினால் ஜலாலாபாத் தவிர வேறெங்கும் வன்முறைகள் இடம்பெற்றதாக தெரியவரவில்லை.

 ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் தலிபான்களின் துப்பாக்கிச்சூட்டில் மூன்று ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த தேசியக்கொடி தலிபான்களின் எழுச்சிக்குப் பின்னர் உபயோகிக்;கப்படவில்லை.

தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் டோலோ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியில் விரைவில் நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவோம். அதன் மூலம் நாட்டில் இஸ்லாமிய அரசாங்கம் ஒன்று நிறுவப்படும். இந்த இஸ்லாமிய அரசு நாட்டுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காது என்று அவர் கூறினார். கடந்த ஞாயிறன்று தலிபான்கள் காபூல் நகருக்குள் பிரவேசித்ததோடு ஜனாதிபதி மாளிகையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். பின்னர் தலிபான் தலைவர்கள் எதிர்கால அரசாங்கத் திட்டங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

தலிபான்கள் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பொது மன்னிப்பு ஒன்றை அறிவித்துள்ளனர். அத்துடன் வேலைக்குப் போகும் பெண்கள் உட்பட எல்லா உத்தியோகத்தர்களும்  பணிக்குத் திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.