கடந்த பேரிடர் காலத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிப்பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள், அந்தத் தோட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தச் சூழலில், கடும் பட்டினியிலும் துயரத்திலும் இருந்த சில தொழிலாளர்கள் தங்கள் ஆதங்கத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டிய பொறுப்பில் இருந்த தோட்ட அதிகாரி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அன்றைய தினம் குரல் கொடுத்த தொழிலாளர்களை இலக்கு வைத்து செயல்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் விளைவாக, ஆறு மாதங்களுக்கு பின்னர் பொலிஸ் முறைப்பாடுகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் இறுதியில் ஐந்து தொழிலாளர்களின் வேலை நீக்கம் வரை இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
தோட்ட அதிகாரியின் சுயநலமும், பழிவாங்கும் மனப்பான்மையுமே அப்பாவி தொழிலாளர்கள் தண்டிக்கப்படக் காரணம் என்பதே மக்களின் வேதனையாக உள்ளது. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய ஒரு அதிகாரியே, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தொழிலாளர்களை ஒடுக்க முயல்வதைக் கண்டித்து, கட்சி, இனம், மதம் கடந்து முழுத் தோட்ட மக்களும் ஒன்றிணைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கக் கோரி, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மக்கள் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்