பசில் ராஜபக்சவுக்கு பயணத்தடை?

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் நிதியை மோசடி செய்ததாக பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, திவிநெகும திட்டத்தின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க மற்றும் திவிநெகும அபிவிருத்தி பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது. தலா ஐந்து லட்ச ரூபா மற்றும் ஐம்பது லட்ச ரூபா சரீரப் பிணையின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்கேத நபர்களின் கடவுச்சீட்டுக்களை தடை செய்யுமாறு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு நீதவான் பத்மினி ரணவக்க உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணைகளில் பசில் ராஜபக்ஸ பிரசன்னமாகியிருந்தார்.