பிரித்தானியப் பிரதமர் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் 13-12-2016 08:59 PM

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை துரிதப்படுத்த எதிர்பார்க்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல், பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில் இரவுணவு ஒன்றில் இவ்வாரம் சந்திக்கவுள்ளனர்.

நாளை மறுதினம் இடம்பெறவுள்ள ஒரு நாள் மாநாட்டில், ரஷ்யா, உக்ரேய்ன், சிரியாவுக்கெதிரான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து, தெரேசா மே உள்ளடங்கலான அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர். இது தவிர, புதிய இத்தாலியப் பிரதமரான பாலோ ஜென்டிலோனியையும் சந்திக்கவுள்ளனர்.

எவ்வாறெனினும், தமது அங்கத்துவ நாடொன்று முதன்முறையாக வெளியேறுவது குறித்த திட்டங்களை, மாலை அமர்வின்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய தலைவர்கள் கலந்துரையாடவுள்ள நிலையில், குறித்த அமர்வுக்கு தெரேசா மே அழைக்கப்படமாட்டார் எனத் தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு இவ்வாண்டு ஜூன் மாதம் பிரித்தானியா வாக்களித்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடிகளை சந்தித்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் இரண்டாண்டு காலப்பகுதியை, அடுத்தாண்டு மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக மே உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, இயலுமான வரையில் மிக விரைவாக பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 தலைவர்களும் அறிக்கையொன்றை வெளியிடுவர் என் எதிர்பார்க்கப்படுகிறது.