பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்?

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்றன. இதில், பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தொழிலாளர் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சியை விட சுமார் 50 இடங்களை அதிகம் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 650 இடங்களில் 645 இடங்களுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 314 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொழிலாளர் கட்சி 260 இடங்களை பிடித்துள்ளது. இன்னும் 5 இடங்களின் முடிவுகள் தான் மீதமுள்ளன.

இதனால், கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. பெரும்பான்மை பெறுவதற்கு 326 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

இதனால், ஆட்சி அமைப்பதற்கு பிரதமர் தெரசா மே இதர கட்சிகளின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது.

ஸ்கொட்லாந்து தேசியவாத கட்சி 35, லிபரல் ஜனநாயக கட்சி 12, ஜனநாயக ஒற்றுமைவாத கட்சி 10 இடங்களை கைப்பற்றியுள்ளன. இதனால் மற்ற கட்சிகளை தெரசா மே அணுகி கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.