புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது பல அதிர்ச்சித் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு தனது உதவியை மஹிந்த நாடியதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் அல்லது கிழக்கு மாகாணத்தில் வைத்து அவரைப் படுகொலை செய்யுமாறு தன்னிடம் மஹிந்த ராஜபக்ஷ வேண்டிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அவ்வாறு செய்தால் தான் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் கொழும்பில் வைத்து மைத்திரிபாலவை படுகொலை செய்யும் திட்டமொன்றை பிள்ளையான் முன்வைத்துள்ளார். அதனை மஹிந்த நிராகரித்துள்ளார்.

பின்னர் இருதரப்பின் இணக்கப்பாட்டுடன் கொழும்பை அண்மித்த பொரலஸ்கமுவையில் மைத்திரிபால சிறிசேன மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக பிள்ளையான் தரப்பு பெண்ணொருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்ட போதிலும், நூலிழையில் மைத்திரிபால சிறிசேன உயிர் தப்பிக் கொண்டதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த விடயத்தில் தற்போதைய புலிகளின் அடிவருடிகள் சந்தோஷப்படக் கூடும். ஆனால் சந்தோஷப்படும் உங்களுக்கு வைத்த ஆப்பு இந்த வாக்கு மூலம் என்பதை உணர வேண்டும் . வாக்குமூலம் கொடுத்த விடயத்து காலகட்டத்தில் பிள்ளையான் பிரபாகரனின் புலிகளின் உறுப்பினர். பிரபாகரனின் கட்டளையையே இவர் நிறைவேற்ற முற்பட்டார் என்பது கவனிக்கதக்கது. சர்வதேச விசாரணையில் அரசும் புலிகளும் சம அளவில் விசாரிக்கப்படுவார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.