மகளின் விடுகை பத்திரத்துக்காக ஆணைக்குழு வரை சென்ற தாய்

குறித்த பிள்ளையுடன் படித்த ஏனைய ஓரிரு மாணவர்களுக்கு விடுகை பத்திரம் கொடுத்த போதிலும் அந்த அதிபர் தனது பிள்ளைக்கு மாத்திரம் பல காரணங்களை கூறி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தாய் குறித்த பிரச்சினை தொடர்பில் கல்வி அதிகாரிகளிடம் எழுத்து மூலமாக முறைப்பாடுகளை கொண்டு சென்ற போதிலும், அவருக்கான தீர்வினை அதிகாரிகள் மற்றும் அதிபர் பெற்றுக் கொடுக்கவில்லை.

 குறித்த தாய் பல தடவைகள் பாடசாலைக்கு வந்து சென்றுள்ளார். தனது பிள்ளைகளை ஒரே பாடசாலையில் கல்வி கற்க வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் பொருளாதார ரீதியில் தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் அதற்கு இடம் கொடுக்காது நடந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பிள்ளையின் தாய் மாவட்டத்தின் மனித உரிமை ஸ்தாபனத்தின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு தனது பிரச்சினையை தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி பாடசாலையின் அதிபரை தொடர்பு கொண்டு குறித்த பிள்ளைக்கு விடுகை பத்திரத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

ஒரு பெற்றோர் தனது பிள்ளையை தனக்கு விருப்பமான பாடசாலையில் அனுமதிப்பதற்கான உரிமை எமது நாட்டில் இருந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் தனது விருப்பத்திற்கு அமைய அடாவடித்தனமாக நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல என பலரும் விமர்சிக்கின்றனர். இவ்வாறு செயல்படும் ஓரிரு அதிபர்களால் ஒட்டுமொத்த அதிபர் சமூகத்துக்கே இழுக்கு ஏற்படுகிறது.