’வடக்கு, கிழக்கில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாகும்’

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கந்தர மீன்பிடித் துறைமுகத்துக்கான வேலைகளை நேற்று (06) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிரண்டு கடல் பிரதேசத்தை கொண்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இரண்டு மீன்பிடித் துறைமுகங்கள் மாத்திரமே இருக்கின்றன” எனக் கவலை தெரிவித்தார்.

எனவே, அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸின் தலைமையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்திற்கு தேவையான துறைமுகங்கள் உருவாக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கந்தர மற்றும் குருநகர் ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்திய இராஜாங்க அமைச்சர், தற்போதைய அரசாங்கத்தில் கந்தர துறைமுகம் தொடர்பாக முதலாவது அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து அங்கிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸு நன்றி தெரிவித்தார்.

சுமார் 4 பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்தத் துறைமுகத்தில் நூற்றுக்கான பலநாள் கலங்களும் சிறு மீன்பிடிப் படகுகளும் பயன்படுத்த கூடிய வகையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.