500 ஏக்கரை விடுவிக்க ரூ.780 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதென, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது என்றும், திறைசேரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்படும், காணிகளிலுள்ள படை முகாம்களை வேறு இடங்களில் நிறுவி, பொதுமக்களுக்கு உரிய அந்தக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது. வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில், ​கொழும்பில் முக்கியமான கூட்டமொன்று இடம்பெற்றது என்றும், அதன்போதே, காணிகளை விடுவிப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு திறைசேரி இணங்கியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

அதற்கமைய, வட மாகாணத்தில் அச்சுவேலி, மயிலிட்டி வடக்கு, தென்மராட்சி, கிளாலி, பளை மற்றும் முகமாலை உள்ளிட்ட இடங்களிலும், கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு முறக்கொட்டஞ்சேனையிலும் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

விடுவிக்கப்படவிருக்கின்ற காணிகள், அடையாளம் காணப்பட்டுள்ளனவென என்றும், குறித்த காணிகளை உறுதிப்படுத்துவதற்கு, அந்தந்த பிரதேசங்களின் செயலாளர்கள், உரிமையாளர்களுடன் தொடர்புகொள்வார்கள் என்றும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.