மனத்தைத் தொட்ட பதில் இது!

ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட பின்பு தமிழகத்திற்கு, “தமிழர் பிரதேசமும் தமிழர்கள் போராட்டமும்” கலை இலக்கியம் என்ற பெயரில் நல்ல சந்தையானது என்பது மிகவும் உண்மை. 2009ல் போர் முடிவுக்கு வர 2010ம் ஆண்டு சென்னைப்புத்தக விழாவிற்கு விற்ற புத்தகங்களில் அதிகளவு ஈழப்பிரச்சனைகள் பற்றியும் மாவீரர்கள் பற்றியதும். அதற்கு அடுத்ததாக கலைஞர்களின் படையெடுப்புகள்.

ஈழகாவியம் எழுதப் போகிறேன் என வீர சபதம் எடுத்து விட்டு வந்த கவிஞர். வைரமுத்து தொடக்கம்… நகைச்சுவைப் பட்டி மன்றப் பேச்சாளர் லியோனி உட்பட ….அண்மையில் சென்று வந்த கங்கை அமரன் – பாலசுப்பிர மணியம் வரை உள்ளடங்குவார்கள்.

அண்மையில் ஆனந்த விகடன் மலருக்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

“போரால் சிதைக்கப்பட்ட ஈழ நிலத்தைப் பார்த்துவர வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியிருக்கிறதா?”

அவரின் பதில்

“இல்லை. நான் பார்க்க விரும்புகிற ஈழம் இப்போது அங்கு இல்லை.

அது 25 – 30 வருடங்களுக்கு முன்னர் இருந்தது.

நாங்கள் ராமநாதபுரத்தில் இருந்தபோது என் அப்பா அடிக்கடி இலங்கை போய் வருவார்.
எங்கள் வீட்டில் நாங்கள் புழங்குகிற பல பொருட்கள் இலங்கையைச் சேர்ந்ததாக அன்று இருந்தன.

மதுரையில் இருந்து இலங்கைக்கு நாடகம் போட கப்பலில் போய்வருவார்கள். அவர்கள் சொல்லக் கேட்ட இலங்கை சார்ந்த ஏராளமான நினைவுகள் எனக்கு இன்னும் பசுமையாக இருக்கின்றன.

இப்போது மிச்சம் இருக்கும் போரின் சிதைவுகளை நான் பார்க்க விரும்பவில்லை. நான் மக்களை அவர்களது மகிழ்ச்சியான வாழிடத்தில் சந்திக்க விரும்புகிறேன்.

பத்து முறைக்கும் மேலாக இலங்கையிலிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்திருக்கிறேன்.

மகிழ்ச்சியாகப் போய்வருவதற்கு இலங்கை இப்போது ஒரு சுற்றுலாத்தளம் இல்லை!

ஆம்!

மனத்தைத் தொட்ட பதில் இது!

(Jeeva Kumaran)