முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?

தமிழ் மக்கள் அழிந்த அதே நாளில் கோடிஸ்வரர்களாகிய இவர்களை பற்றி தெரியுமா?

பல்லாயிரக் கணக்கானோர் உயிர்களை கொடுத்தும், உயிர்களை எடுத்தும் வளர்ந்த விடுதலைப் புலிக…ள் இயக்கம் 2009-ம் ஆண்டு மே மாதம், முள்ளிவாய்க்கால் பகுதியில் கனவு போல மறைந்து போனது. பல ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்து போராடியவர்கள், உயிரிழந்தோ, சரணடைந்தோ, அல்லது தப்பியோடியோ விட்ட துரதிஷ்டமான நிலையில்…

முள்ளி வாய்க்காலில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில், ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், சில தென்கிழக்காசிய நாடுகளிலும் சிலருக்கு அதிஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டியது.

2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி, இரவோடு இரவாக மில்லியனர்கள் ஆனவர்களும் உள்ளார்கள்.

இப்படியொரு சந்தர்ப்பம் (விடுதலைப் புலிகளின் அழிவு) ஏற்படும் என 2009-ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஊகித்து, புலிகளின் சொத்துக்களையும் பணத்தையும் தமது கன்ட்ரேலுக்குள் கொண்டுவந்தவர்களும் உள்ளார்கள்.

அதற்காக ஏப்ரல் மாதத்தில் இருந்து தினமும் காலையில் எழும்போது, “முடிந்ததா யுத்தம்? அழிந்ததா புலி?” என ஆவலுடன் செய்தி பார்த்தவர்களும் உள்ளார்கள்.

மே மாத தொடக்கத்தில் பிரபாகரனும், வேறு சிலரும் தப்பித்துப் போக ஒரு திட்டம் போடப்பட்டு, அதற்கு சுமார் 1 மில்லியன் டாலர் தேவை என்ற நிலையில், புலிகளின் வெளிநாட்டுப் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து, 18-ம் தேதி அந்தப் பணத்துக்கு தாமே உரிமையாளர் ஆனவர்களும் உள்ளார்கள்.

அந்த நேரத்தில் அவர்களிடம், 1 மில்லியன் என்ன, அதைவிட பலமடங்கு தொகை இருந்தது! அது அவர்களது சொந்தப் பணமல்ல, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுப் பணம்.

எப்படியோ, அவர்களில் பலர் எதிர்பார்த்தது போல, வன்னியில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதியுடன் முடிந்தது. அதன் பின் வெளிநாடுகளில் தொடங்கியது, சிறப்பு யுத்தம் – பணத்துக்காக வெளிநாட்டுப் புலிகள் புரிந்த குருஷேத்திர யுத்தம்!

இதில் ஜெயித்தவர்கள் இருக்கிறார்கள். இருந்த பணத்தை இழந்தவர்கள் இருக்கிறார்கள். தப்பியோடியவர்கள், பிரிந்து போனவர்கள், புதிய கோஷ்டி தொடங்கியவர்கள் என்று தொடங்கி, மார்க்கெட் போன தென்னிந்திய நடிகைக்கு பிறந்தநாள் பரிசாக BMW கார் வாங்கிக் கொடுத்தவர்கூட இருக்கிறார்.

மிகவும் சுவாரசியமான யுத்தம் அது. ஆளையாள் ஏமாற்றிய சாதுர்யம்…

அதுவரை ஒன்றாக இருந்தவரையே வெளிநாட்டு உளவுத்துறையிடம் போட்டுக் கொடுத்து விட்டு, தாம் தப்பித்துக் கொண்ட கெட்டித்தனம்..

பணத்தை பறிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், டஜன் கணக்கில் கொடுக்கப்பட்ட துரோகிப் பட்டங்கள்…

இறந்து போனவர்களில் இமெயில்களை ‘உடைத்த’ திறமை…

நேற்று ஏமாற்றி அடித்த சொத்தை இன்று வந்தவர் அடித்துக்கொண்டு போன கில்லாடித்தனம்…

இன்று வெளிநாட்டில் உள்ள சிலருக்கு, விடுதலைப் புலிகளின் யுத்தம் தோல்வியில் முடியவில்லை… அமோக வெற்றி!

பணம் பிரிக்கும் பிரச்னையில் இவர்கள் பல பிரிவுகளாக இருந்தாலும், இன்றைய தேதிவரை இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, ‘பிரபாகரன்’ என்ற பெயரை நம்புவதுதான்!

காரணம், அந்த ‘பெயர்’தான், இவர்களின் மில்லியன்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது!

“தலைவர் வரட்டும், ஒரு டாலர் குறையாமல் கணக்கு முடித்து விடுகிறேன்”

“அடுத்த யுத்தத்துக்கு தேவை என்பதால் பணத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி தலைவர் நேற்றுதான் தென்னாபிரிக்காவில் இருந்து போன் பண்ணினார்”

மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் எல்லாம், சர்வ சாதாரணமாக சிலரது வாய்களில் இருந்து வெளியாகும்!

கேட்பவருக்கும் இது கப்சா என்று தெரியும். சொல்பவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டுதான் சீரியசாக சொல்வார்.

ஆனால் என்ன செய்வது? இருவருமே, “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” என்ற மந்திர வார்த்தையை வைத்துத்தான் தொழிலை நடத்துகிறார்கள்………சிவா.