’இறுதி டெஸ்டில் பங்கேற்ற அந்த விசேட விருந்தினர்’ சச்சின் பகிர்வு

“மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்துமாறு கோரியமைக்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 24 வருடங்கள், இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் விளையாட்டை அவரது தாய் ஒருமுறையேனும் நேரடியாக பார்த்திராத நிலையில், தனது இறுதி டெஸ்ட் போட்டியினை தனது தாய் இரசிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த போட்டியை மும்பையில் நடத்தக்கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

தனது தாயாரால் நடக்கமுடியாத காரணத்தினால், மும்பையில் இந்தப் போட்டியை நடத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சச்சின் தெரிவிக்கையில் “நான் என்னுடைய கடைசி மற்றும் 200ஆவது டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்த விரும்பினேன். நான் கிரிக்கெட் விளையாட்டைப் பழகிய வயதில் இருந்து, பாடசாலையில் கிரிக்கெட் விளையாடியதில் இருந்து இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியதுவரை ஒரு முறைகூட நான் எப்படி விளையாடுகிறேன் என்பதை என் அம்மா பார்த்தது இல்லை.

கடைசியாக நான் ஓய்வு பெறும்போது அவர் என் விளையாட்டை முதல்முறையாக அரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் அம்மா, மனைவி அஞ்சலி, என் நண்பர்கள் என பலரும் வந்திருந்தனர். அன்றைய தினம் (200ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற தினம்) நான் மாலையில் 25 நிமிடங்கள் வரை துடுப்பெடுத்தாடினேன். மிகப்பெரிய திரையில் என் அம்மா அமர்ந்து என்னுடைய விளையாட்டை பார்ப்பதைப் பார்த்தவுடன் எனக்கு உணர்ச்சிப் பெருக்கில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

அந்தவிலை மதிக்கமுடியாத தருணத்தை என்னவென்று நான் சொல்வது. என் கிரிக்கெட் விளையாட்டை முதல்முறையாக நேரடியாகப் பார்க்க வந்துள்ளார் என்று நினைத்து மகிழ்ந்தேன். என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, கண்ணீரை அடக்கிக்கொண்டு விளையாடினேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.