அரசியல் இன்றேல் தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு என்ன? – TULF

தீவிர அரசியலில் 55 ஆண்டுகளுக்குமேல் ஈடுபட்டிருக்கும் நான் தமிழ் மக்கள் மத்தியில் எனது செயற்பாடுகள் பற்றி எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். 1960ம் ஆண்டு தொடக்கம் உள்ளுராட்சி மன்றங்கள் பாராளுமன்றம் போன்ற ஸ்தாபனங்கள் மூலம் எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்பட்டு வந்திருக்கின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றேன். தமிழ் மக்களின் இனப்பிரச்சனை சம்பந்தமாக விசேடமாக இன்று மிக அவதானமாகவும் புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டிய காலம் இதுவென நினைக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் பெரும் சாதனைகளை புரியலாமென கருதி நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன் இயக்கத்துக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் பற்றி விபரிக்க தகுந்தநேரம் இதுவல்ல. இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தெரியாமலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டு எதுவித பொறுப்பும் வழங்கப்படாது ஒதுக்கப்பட்டிருந்தேன். அதன் பின்னர் இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் சில புறந்தள்ளப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகபிரதிநிதிகளாக காலத்துக்காலம் ஒரு கட்சி ஏனையவற்றை புறந்தள்ளி செயற்படுகின்றது. இதன் விளைவாக இன்று பெயரளவில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்குகின்றதேயொழிய சில சந்தர்ப்பத்தில் ஒரு கட்சி மட்டும் தனியாகவும், வேறு சந்தர்ப்பத்தில் இரு கட்சி தலைவர்கள் இணைந்தும், பெருமளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அணியின் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளமையால், தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்டா இல்லையா? என்ற நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது. இக்கட்டத்தில்தான் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு புதிய அணியை உருவாக்க உத்தேசித்து நல்லதொரு தலைமையை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருந்தேன். சிலர் திட்டமிட்டு இம்முயற்சியை தோல்வியடைய செய்துள்ளனர். ஆனால் இன்றைய அவசர சூழ்நிலையை உணர்ந்து வட மாகாண முதலமைச்சரின் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் முன்னோடியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையைகூட விட்டுக்கொடுக்க தயாராக இருந்தேன்.

முதலமைச்சர் அவர்கள் மிக கண்ணியமான முறையில் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாகட்டும் அதன்பின் தலைமை தாங்குவது பற்றி பரீசிலிக்கலாம் என்ற தொனியில் அறிக்கை விட்டிருந்தார். இக்கட்டத்தில் நான் மேலும் மேலும் வலியுறுத்துவது என்னவெனில் இன்று ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இதைவிட வேறுவழி எனக்குத் தெரியாத காரணத்தினால் புதியதொரு அணி அவசியமானதொன்றாக தென்பட்டது. அவ்வாறு நான் சிந்தித்தமைக்கு பல காரணங்கள் உண்டு.

இந்த நேரத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை இணைத்துக் கொண்டு ஒரு சிலர் சேர்ந்து முதலமைச்சரை தலைவராக தமிழ் மக்கள் பேரவையை எதுவித முன்னறிவித்தலும் இல்லாமல் ஆரம்பித்துள்ளனர். அது குறித்து பெரிதாக எதனையும் நான் நினைக்கவில்லை. ஏனெனில் இன்றைய உடனடி தேவையாக அதுஇருந்தது. அதுகூட என்னை துன்புறுத்தவில்லை ஆனால் ஒற்றுமைக்கு கிடைத்தவொரு அருமையான வாய்ப்பை இழந்துவிட்டோம் என்றவொரு கவலைதான் எனக்கு. இவ்வாறு உருவாகவிருந்த அமைப்பு ஒரு புதிய அரசியல் அணியாக உருவாக்கப்பட்டிருப்பின் பொருத்தமானதாக அமைந்திருக்குமென எண்ணி மகிழ்ச்சியடைந்திருப்பேன்.

ஆனால் இன்றும்கூட பொருத்தமான நிலை ஏற்படவில்லை. ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பல்வேறு தரப்பினரைக் கொண்டு தற்போது தொடங்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒத்தாசையாகவே செயற்படும், இதற்கு எதிர்ப்பில்லை ஆதரவாகவே செயற்படும் என தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகை அறிக்கைகள் மேலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்துள்ளது. இக்கருத்து உண்மையாக இருக்குமானால் அது பிரயோசனம் எதையும் தராது என்பதுமட்டுமல்ல மாற்று வழியை கையாளுவதற்கு முட்டுக்கட்டையாகவே அமையும்

தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் போக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அவ்வமைப்பிலுள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் சிலருக்கு பெரும் அவமானத்தையும் தந்து கொண்டிருக்கின்றது. ஆகவே தமிழ் மக்கள் பேரவையின் முயற்சிக்கு நான் முட்டுக்கட்டை போடுவதாக தவறாக எண்ணாமல் எனது ஆலோசனையையும் கேட்டு இதை அரசியல் அணியாக மாற்றுவார்களேயானால் எனது ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவே இருக்கின்றேன். ஆகவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யலாம். இந்த விடயத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களோடு நீண்டகாலம் பழகியமையால் அவர்கள் இப்பிரச்சனையை எவ்வாறு அணுகுவார்கள், அவர்களின் அணுகுமுறையில் நிச்சயம் ஒரு நல்ல முடிவு வராது என்பதை முன்கூட்டியே என்னால் கூறமுடியும்.

தமிழ் மக்கள் பேரவை நல்லதொரு அரசியல் சாசனத்தை உருவாக்கித் தருவோம் என்கிறார்கள் ஆனால் அவர்கள் உருவாக்கும் வரைவை இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியே. உத்தேச அரசியல் அமைப்புக்கு பலவிதமாக ஆலோசனைகள் பல கடந்த காலங்களில் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளன. எது எப்படியிருப்பினும் இந்த வட்டத்துக்குள்ளே ஓட முடியுமே தவிர வேறு எந்தத் தீர்வையும் உள்ளே கொண்டுவர முடியாது. இந்த விடயத்தில் முன்னைய 1970, 72 இல் செயற்பட்ட அரசியல் சாசன நிர்ணய சபையின் இரண்டு ஆண்டுகள் அனுபவத்தைக் அடிப்படையாகக்கொண்டு கூறுகின்றேன். பத்திரிகையொன்றில் சமஸ்டி அரசியல் முறைமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஒரு அமைச்சரும், தீவிரமாக இயங்கும் ஒரு பௌத்த அமைப்பு கடைசிவரை தற்போதைய அரசியல் சாசனத்தை கைவிட அனுமதியோம் எனவும் கூறியுள்ளனர் இப்படி நாளுக்கு நாள் பல தரப்பட்ட அதிகாரப் பகிர்வை அனுமதிக்கமாட்டோம் என்று கூறுகின்ற பலம் மிக்க அமைச்சர்களையும் நாமறிவோம். எல்லாவற்றுக்கும் மேலாக புதிய அரசியல் சாசனத்தை முன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளால் பாராளுமன்றத்திலும் பொதுசன வாக்கெடுப்பு மூலமும் அங்கீகாரம் பெற்றே அமுல்படுத்துவோம் என சில தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுபோன்ற பல விடயங்களை சீர்தூக்கி பார்ப்பின் இது நடக்கப் போகின்ற விடயமல்ல என்பது உறுதியாகின்றது. ஆகவே பிரச்சனை தீவிரமடையும் முன் பலரும் கூடி ஆலோசித்து நல்லதொரு முடிவை, தமிழ் மக்கள் பேரவையின் தீர்மானத்தின் மூலம் எடுக்க வேண்டும். அல்லது வேறு பொருத்தமான நடவடிக்கை மூலமாகவேனும், தமிழ் மக்கள் பேரவையை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி செயற்பட வேண்டுமென்ற எனது தாழ்மையான கருத்தை முன்வைக்கின்றேன். நான் பெரும் புத்திசாலியென நினைத்து இதனைக்கூறவரவில்லை ஆனால் கொஞ்சம் சட்டம் படித்தவன் கொஞ்சம் அனுபவம் உள்ளவன் என்ற தைரியத்தில் இந்த ஆலோசனையை முன் வைக்கின்றேன். இதனை ஏற்பதோ அல்லது நிராகரிப்பதோ தமிழ் மக்கள் பேரவையின் விருப்பம். ஆனால் பொருத்தமான மாற்றத்தை மேற்கொள்ள தவறின் அது புதியவொரு அரசியல் கட்சி உருவாவதற்கு வழிவகுக்கும் என்ற எனது ஐயத்தையும் வெளிப்படுத்துகிறேன். பேரவையில் இணைந்துள்ளவர்களில் அனேகர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று சிலர் கூறுகின்றனர். அதனை எவரும் பொருட்படுத்தத்தேவையில்லை. ஏனெனில் அவர்கள் தங்களது கடந்த காலத்தைப்பற்றி கூறுகின்றனர்.
வீ. ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம்- த.வி.கூ