திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன. கன்னியா வெந்நீரூற்றுக்கருகாமையில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டது. தற்போது பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டும் சிவனாலயம் பராமரிப்பாரற்றும் காணப்படுகின்றன.

மறுமுனையில் திரிபுபடுத்தப்பட்ட பௌத்த வரலாறுகளை இதனுடன் தொடர்பு படுத்தி அரசியல் மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.
இப்போது இந்து மத அடையாளங்கள் அருகி பௌத்த வழிபாட்டுக்குரிய அடையாளங்களே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது இப்பிரதேசம் தொல்பொருளியல் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ளது. தற்போது வழங்கப்படும் நுழைச்சீட்டிலே இவை அநுராதபுரகாலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் பௌத்த மதத்திற்குரிய பிரதேசத்தில் அமைந்திருப்பதாகவும் தொல்பொருளியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, கன்னியா வெந்நீரூற்று ஒரு சிங்கள மன்னனால் பௌத்த மதத்துக்குரியதாக அமைக்கப்பட்டதென்றும் அங்கே விகாரையொன்றும் கட்டப்பட்டதாகவும்,
போயா தினங்களில் குறிப்பாக வெசாக் பொசன் தினங்களில் நீராடினால் புண்ணிய பலன் கிட்டுவதாக அந்த சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது!
அடுத்த தலைமுறையில் வரலாற்று பாடநூல்களில் இந்த புதிய வரலாறு அச்சிடப்பட்டு இந்துக்களின் வரலாறு மறைக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல
ஒன்று தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல
ஒன்று நீதி பெறாவேளை துயர் மனம் போல ஒன்று நிறைபழித்த கற்புடையாள் மனம் போல
ஒன்று காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னி
யாயில்”
நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கன்னியா வெந்நீரூற்று குறித்து எழுதிய பாடல் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது!

இக்கட்டுரைபற்றி கருத்துக்கள்:

அது புலிகள் காலத்திலேயே தொடங்கிவிட்டது.அன்றைய இந்து சமய கலாச்சார அமைச்சர்,இணக்க அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா அவரகள் கண்களுக்கும் படவில்லை.எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அய்யாவுக்கும் படவில்லை.இஸ்லாமிய தலைவர்கள் கண்களுக்கும் படவில்லை.சித்தர்,சிறிதரன் கண்களுக்கும் படவில்லை.

Ganeshalingam Kanapathipillai:  நானும் நேரடியாகவே பார்த்தேன். நான் பன்முகப்பார்வை கொண்டவனாக இருந்தபோதும் அங்கே நடப்பவை கவலையளித்தது. இதன் காரணங்களில் ஒன்றாக போரைப் பார்க்கிறேன். ஈழப்போரின்போது இடம்பெயர்ந்த திருகோணமலை மக்களின் வெளியேற்றத்திற்குப்பின்னரே இப்படி ஏற்பட்டது……

Siva Easwaramoorthy:  நானும் பல் இன பல கலாச்சார மக்களுடன் இணைந்து வாழும் பரந்து பட்ட பார்வை உடையவன் இனப் பரம்பல் என்பது இயல்பாக எற்படுதல் தவிர்க்க முடியாதது அனால் இங்கு நடைபெறுவது வலிந்து பரம்பல். எனவே தான் இக்கட்டுரையை உண்மை என்கின்றேன். நாலு மாதத்திற்கு முன்பு அங்கு போனபோது எனக்கும் இதே உணர்வு எற்பட்டது. தமிழ் மக்களின் அடையாளங்களை மறைப்பு செய்யும் செயற்பாடுகளை கன்னியா வெந்நீர் ஊற்று கிணற்றை சுற்றி திட்டமிட்டு செய்கின்றனர் இதே மாதிரியான வேலைகளை 30 வருடங்களுக்கு முன்பு திருகொணமலை கோணேசர் கோவிலில் ஆரம்பித்துவிட்டனர்.

இவற்றிற்கு எல்லாம் முற்றுப் புள்ளிவைக்கும் நோக்குடனேயே நாம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் தலமையகத்தை ஜேஆர் இன் எல்லா சலுகைகளையும் நிராகரித்து அங்கு ஆரம்பித்தோம். தொடர்ந்து இரு கோட்டு தத்துவத்திற்கு ஏற்ப பெரிய கோட்டிற்கு இருகில் இன்னொரு பெரிய கோட்டை வரைதல் மூலம் முன்பிருந்த பெரிய கோட்டை சிறிய கோடாக்க முயன்றோம். எம்மால் ஒருவருடம் தாக்கு பிடிக்க முதல் புலிகள் பிரேமதாச. ஜேவிபி, வி.பி. சிங், கருணாநிதி எல்லோரும் சேர்ந்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை இல்லாமல் செய்து தொடர்ந்து 30 வருட யுத்தம் செய்து எல்லாவற்றையும் இழக்க செய்துவிட்டனர் இறுதியில் முள்ளிவாய்காலில் மக்களையும் பலி கொடுத்தனர்.