எல்லைக் கோடுகளும் துப்பாக்கிச் சத்தங்களும் மட்டுமல்ல, ‘மொழித் திரை’ எனும் அரூப சுவரும் அந்த ஆதரவுக் குரல்களை நம்மை வந்தடையவிடாமல் மறைத்திருந்தது.பேரினவாதத்தின் இருள் சூழ்ந்த அக்காலத்தில், நீதிக்காகக் குரல்கொடுத்த கலைஞர்கள் தடைசெய்யப்பட்டார்கள்.
மஞ்சுள வெடிவர்தன போன்ற எழுத்தாளர்கள், தமிழர் மீதான அடக்குமுறையை அம்பலப்படுத்தியதற்காக, 2009 முதல் தாயகம் திரும்ப முடியாமல் அகதி வாழ்வை வாழ்கின்றனர்.
நந்தா மாலினியின் ‘பவனா’ இசை ஆல்பத்தின் பாடல்களும், நீதிக்கும் சாதாரண மக்களின் போராட்டங்களுக்கும் குரல் கொடுத்ததால், அரச வானொலி-தொலைக்காட்சிகளில் தடை செய்யப்பட்டன; அதன் ஒலிநாடாக்களை வைத்திருப்பதே ஆபத்தாகக் கருதப்பட்ட காலம் அது.
ஆனாலும், இசையும் கவிதையும் எந்த அடக்குமுறையை விடவும் வலிமையானவை. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் நீடித்த தன் பாடும் பயணத்தில், நந்தா மாலினி யுத்தத்தின் அநீதியையும், மகன்களைப் பறிகொடுத்த தாய்மாரின் துயரையும் உலகுக்கு உரக்கச் சொன்ன பாடகியாக மாறினார்.
வடக்கில் ஒரு தமிழ்த் தாய் உகுத்த கண்ணீருக்கும், அரச அடக்குமுறையால் ஒரு சிங்களத் தாய் உகுத்த கண்ணீருக்கும் வேறுபாடேயில்லை என்பதை அவரது குரல் மீண்டும் மீண்டும் நினைவூட்டியது.
‘சத்தியாயே கீதயா’, ‘பவனா’ போன்ற தொடர்கள், இசை ஆல்பங்கள், ‘குங்கும பொட்டு’ எனும் தமிழ்ப் பாடல் தொகுப்பு ஆகியவை — இன , மொழி தடையறைறு மனிதநேயத்தை அவர் இசையின் ஆன்மாவாகக் கொண்டிருந்ததற்குச் சான்று.
அக்காலத்தில் மொழித் தடையால் அப்பாடல்களின் கவித்துவ ஆழத்தையும், அதனுள் ஒளிந்திருந்த நீதிக்கான தாகத்தையும் தமிழ் சமூகம் முழுமையாக உணரமுடியாமல் போயிருக்கலாம்.
இன்று, செயற்கை நுண்ணறிவின் துணையோடு அப்பாடல் வரிகளைத் தமிழில் வாசிக்கும்போது, தெற்கிலிருந்து ஒலித்த அந்த உன்னதக் குரலின் மனிதநேயம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
எழுபதாண்டு இசைப் பயணத்தை முடித்துக்கொண்டு 2026.08.20 அன்று, தனது 82 வயதில், அவரது 83வது பிறந்தநாளுக்கு வெறும் மூன்று நாட்களே இருக்கும்போது நந்தா மாலினி மறைந்திருக்கிறார்.
ஆனால் அவரது குரல் வழியே எழுந்த நீதிக்கான அலைகள், இனவாதப் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு, என்றென்றும் மனிதநேயத்தின் குறியீடாக ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
பின்குறிப்பு: நத்தா மாலினியின் குங்கும பொட்டு தமிழ் பாடல் ஆல்பத்தின் பாடல்களை யூடியூபில் தேடிக் கிடைக்கவில்லை. அந்த ஆல்பத்திலுள்ள எங்கள் சொந்த மண்ணில் பாடல் வரிகள் இவை.
இப்பாடல் போரினாலும் இடப்பெயர்வாலும் தாய்நிலத்தை இழந்து தவிக்கும் மக்களின் ஏக்கத்தையும், மீண்டும் சொந்த மண்ணில் உரிமையோடும் சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தும் பாடலாகும்.
எங்கள் சொந்த மண்ணில் நாங்கள் வாழ வேண்டும்எந்த அச்சமும் இன்றிச் சிரித்து வாழ வேண்டும்!
அகதி முகாம்கள் அற்ற புதிய காலம் தோன்ற வேண்டும்அமைதித் தென்றல் எங்கள் நிலத்தில் வீச வேண்டும்!
சிதைந்துபோன வீடுகளும் கருகிப்போன சோலைகளும்மீண்டும் மலர்ந்து சிரிக்கும் காலம் விரைந்து வர வேண்டும்!
ஆயுதங்கள் வீசிய பேரிருள் விலகிப் போக வேண்டும்எங்கள் நிலத்தின் வெளிச்சம் மீண்டும் எம்மைச் சேர வேண்டும்!
உரிமையோடு உழுது வாழும் வயல்கள் கிடைக்க வேண்டும்பிரிந்து போன சொந்தங்கள் எம்மோடு இணைய வேண்டும்!
தாயகத்தின் மண்ணைத் தொட்டு வணங்கும் நாளில் நாங்கள்மனிதநேயக் கொடியை ஏற்றி வாழ வேண்டும் என்றும்!
துரதிர்ஷ்டவசமாக நந்தா மாலினி மறையும் போதும் எங்கள் சொந்த மண்ணில் உரிமையோடு உழுது வாழும் வயல்கள் கிடைக்க வேண்டும் என்கிற ஏக்கம் எம்மக்களுக்கு முழுமையாக நிறைவேறவில்லை.