‘விஷ ஊசி பரிசோதனையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்’

வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகளை, முன்னாள் போராளிகள் மனம் தளராது தைரியமாக எதிர்கொள்ளுமாறு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத் தொகுதி, வெள்ளிக்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சைக்கு உட்படுத்தபட்டிருக்கலாம், ஊசி போடப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது குறித்த ஊசி, விஷ ஊசியாக இருக்கலாமா? என சந்தேகம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அவர்களை நம்பி அவர்களின் குடும்பத்தினர் உள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான வேலைவாய்ப்பும் இல்லை, கடின உழைப்பின் மத்தியில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு, இவ்வாறான செய்தி மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது’ என்றார்.

‘அன்று போராளிகளாக இருந்தவர்கள் பின்னர் சிறைக்கைதிகளாக மாற்றப்பட்டனர். உயிருடன் மீண்டு வருவோமா என்ற அச்சத்துடன் காத்திருந்தவர்கள் இன்று உயிருடன் வந்திருக்கின்றார்கள். முன்னாள் போராளிகள் உயிரிழந்திருந்தால், அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அறிவித்துள்ளேன். அவர்கள் எந்த வைத்தியசாலையில் உயிரிழந்தார்கள் என அவர்களின் மருத்துவ அறிக்கைகளை பார்த்து ஆராய முடியும்’ எனவும் அவர் கூறினார்.