சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில், வெலிவேரிய பகுதியில் பொலிஸார் தனது புத்தம் புதிய மின்சார வாகனத்தை நிறுத்தியதாக குறித்த வாகன உரிமையாளர் தெரிவித்துள்ளார். வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பச்சை நிற இலக்கத் தகட்டை அவதானித்த பொலிஸார், அது தொடர்பில் விசாரணை நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
புதிய வகை இலக்கத் தகடு தொடர்பில் பொலிஸாருக்கு போதிய அறிமுகம் இல்லாத காரணத்தினால் இந்த விசாரணை இடம்பெற்றதாகவும், இதன்போது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வாகனப் பதிவு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்களை தான் பொலிஸாரிடம் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இலக்கத் தகடு சட்டபூர்வமாக வழங்கப்பட்டதே தவிர, போலியானது அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தச் சம்பவத்திற்காக பொலிஸாரை மட்டும் குறை கூற முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், மின்சார வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் அறிமுகப்படுத்தப்பட்டமை தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு உரிய முறையில் தகவல் வழங்கப்படாமல் இருந்திருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்காக, வாகனப் பதிவு நடைமுறைகள் மற்றும் இலக்கத் தகடுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும் உடனடியாக அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்களின் பிரதிகளை நாடளாவிய ரீதியில் உள்ள போக்குவரத்துப் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம், வாகன உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகனப் பதிவு மற்றும் அடையாளப்படுத்தல் முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு போதிய தகவல் மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.